டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இதுவரை டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 20ஆக அதிகரித்துள்ளது.  


கொரோனா தொற்று சற்று ஓய்ந்ததை அடுத்து தற்போது ஒமிக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. உலக அளவில் இதுவரை 72 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது நம்மால் கணிக்க முடிந்த அளவு மட்டுமே என்றும், இன்னும் பல நாடுகளில் பரவியிருக்க வாய்ப்புகள் இருக்கிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து வருகிறது. 


இந்தியாவில் 87 பேருக்கு ஒமிரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்படுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 20ஆக அதிகரித்துள்ளது.  இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 



ஒமிக்ரான் தொற்று டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகம் பரவும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, ஒமிக்ரான் மாறுபாடு மனித சுவாசக் குழாயை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தகவலை வழங்கும் முதல் ஆய்வு இதுவாகும். ஒமிக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட வேகமாகப் பரவுகிறது மற்றும் மனித மூச்சுக்குழாயில் உள்ள அசல் SARS-CoV-2 வைரஸை விட வேகமாக பெருகும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2007-ஆம் ஆண்டு முதல் வளர்ந்து வரும் வைரஸ் தொற்றுகளை ஆராய்வதற்கு சுவாசக் குழாயின் எக்ஸ் விவோவை (உயிருள்ள உடலுக்கு வெளியே) , ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். Ex vivo என்பது ஒரு உறுப்பு, உயிரணு அல்லது திசுக்களை உயிருடன் எடுக்கப்படும் மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாகும். 


சோதனை மாதிரியைப் பயன்படுத்தி, டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகைகளால் மனித மூச்சுக்குழாய்களில் ஏற்படும் தொற்றுநோயை ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது ஒமிக்ரான், டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகமாக பரவுவதை சோதனை தொடங்கப்பட்ட 24 மணிநேரத்தில் உறுதிப்படுத்தினர். அதேசமயம், மனித நுரையீரல் திசுக்களில், ஒமிக்ரானின் செயல்பாடு SARS-CoV-2 வைரஸைக் காட்டிலும் குறைவான செயல்திறன் கொண்டதாக (10 மடங்கு) கண்டறியப்பட்டது. 


ஆய்வின் முதன்மை ஆசிரியரான டாக்டர் மைக்கேல் சான் சி-வாய் கூறுகையில், இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்றார். அவர் மேலும் கூறுகையில், மிகவும் தொற்றுநோயான வைரஸ் அதிகமான மக்களைப் பாதித்து மிகவும் கடுமையான நோயையும் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.