”இரவு முழுவதும் சித்ரவதையாக இருக்கிறது” : ஆக்சிஜனைப் பிடுங்கிவிட்ட விஷயத்தில் முக்கிய ஆதாரம்!

இரண்டு வாரங்களுக்கு முன் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மருத்துவமனையில் கோரோனா நோயாளிகளின் ஆக்சிஜனைப் பிடுங்கிவிட்டு ஒரு கொடூரம் நடத்தப்பட்டதை மறந்திருக்க மாட்டோம். அந்த விவகாரத்தில் யாருக்கும் உயிரிழப்பு இல்லை என அந்தத் தனியார் மருத்துவமனை உரிமையாளர் கூறியிருந்தார்; ஆனால் அது பொய் என இப்போது பிரச்னை கிளம்பியிருக்கிறது. 

Continues below advertisement

ஆக்ராவில் உள்ள ஸ்ரீ பராஸ் மருத்துவமனையில்தான் கடந்த மாதம் 26ம் தேதியன்று அந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.. அல்ல நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அதன் உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின் அன்று இரவு, அங்கு சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் 22 பேருக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜனை நிறுத்தினால் என்ன ஆகும் என்பதை அறிய, ஆக்சிஜன் சுவிச்சை நிறுத்தினார்.

Continues below advertisement

அதனால் 22 பேரின் உடலும் நீலநிறமாக மாறியிருந்தது. அத்துடன் அவர்கள் கடுமையான மூச்சுத்திணறலுக்கும் ஆளாகினர். இந்தத் தகவலை, அரிஞய் ஜெயினே கூற, அது காணொலியாக, சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது. நாடு முழுவதும் பரவிய அந்த அதிர்ச்சிக் காணொலியால், மாநில அரசு உடனடியாக அந்த மருத்துவமனையை மூடி, சீல் வைத்தது.  ஆனால், அதனால் எந்த நோயாளிக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றே அரிஞ்சய் சாதித்துவந்தார்.

இந்த நிலையில்தான், அன்றைய இரவு அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராதிகா எனும் 36 வயதுப் பெண் அந்த மருத்துவமனையில் இறந்துபோனதாகவும் இறப்பதற்கு முன்னர் அவர் தன் கணவருக்கு அவசர உதவிக்கான குறுந்தகவல்களை அனுப்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இரண்டு குழந்தைகளின் தாயாரான ராதிகாவின் கணவர் சௌரவ் அகர்வால், ஆக்ராவில் ஒரு வர்த்தகர்.


தன் மனைவி கடைசி நேரத்தில் அனுப்பிய அவசரகாலத் தகவல்களை வெளியிட்டுள்ளதுடன், காவல்துறையிடம் புகார் அளிக்கவும் முன்வந்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இண்டியா ஊடகத்துக்கு சௌரவ் அளித்த பேட்டியில், அன்று இரவு என் மனைவி அடுத்தடுத்த அவசரகால உதவிக்கான தகவல்களை அனுப்பியிருந்ததைக் கூறியுள்ளார். அதில், ”ஆக்சிஜன் கிடைக்காமல் இரவு முழுவதும் சித்திரவதையாக இருக்கிறது. அடிக்கடி ஆக்சிஜன் நிறுத்தப்படுகிறது. இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக அவதியுறுகிறோம். என்னை வெளியில் கூட்டிப்போய் எங்கேயாவது சேருங்கள்.. இல்லையென்றால் நான் செத்துப்போய்விடுவேன்போல..” என்று ராதிகா குறிப்பிட்டிருக்கிறார். 

தன் மனைவியின் இறப்பு கொலை எனும் சௌரவ்,”அவர்கள் அவளைக் கொன்றுவிட்டார்கள். அந்த மருத்துவமனை உரிமையாளர் மீது கொலைவழக்கு பதியுமாறு போலீசைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆக்சிஜனை நிறுத்தியதால் நோயாளிகள் மோசமாகிவிட்டனர் என்பதை அரிஞ்சய் ஜெயின் ஒப்புக்கொள்கிறார்தானே..” என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். 

கொரோனா தொற்று உறுதியான பிறகு மூச்சுவிடுவதில் சிரமம் உண்டாகவே, ராதிகாவை அவர்கள் குடும்பத்தினர் ஸ்ரீ பராஸ் மருத்துவமனையில் ஏப்ரல் 15 அன்று சேர்த்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் 3 இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்ப்பது என முடிவுசெய்தபோது வேறு மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என்பதால், பராஸ் மருத்துவமனையில் சேர்த்ததாகச் சொல்கிறார், சௌரவ். ஏப்ரல் 27ஆம் தேதி காலை 6 மணிக்கு திடீரென எங்களை அழைத்து என் மனைவி இறந்துவிட்டார் என மருத்துவமனை தரப்பில் தெரிவித்தார்கள் என்றார் அவர். இந்தப் பிரச்னையை இப்படியே விட்டுவிடப் போவதில்லை என்றும் சட்டரீதியாக இதை மேற்கொண்டு எடுத்துச்செல்லப் போவதாகவும் சௌரவ் கூறியுள்ளார். அந்த மருத்துவமனையின் தொழில் உரிமம் ரத்துசெய்யப்பட்டு, அரிஞ்சய் ஜெயின் மீது பல வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இனி, கொலை வழக்கும் பதியப்படலாம்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola