உலகில் மிகவும் அதிகமாகப் பரவக் கூடிய சின்னம்மை நோய்த் தொற்றுக்கு இணையாக டெல்டா வகை கொரோனா தொற்று பரவல் இருப்பதாக அமேரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மைய உள்ளறிக்கையில்  தெரிவிக்கப்பட்டது.     


இந்த உள்ளறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவை தற்போது கசிந்துள்ளது. 


எபோலா, ஸ்பேனிஷ் ஃப்ளு, தட்டமை போன்ற நோய்த் தொற்றுகளை விட அதிகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது. மேலும், உலகில் அதிகமாக பரவக் கூடிய தன்மை கொண்ட சின்னமை தொற்றுக்கு இணையாக டெல்டா வகை பரவல் உள்ளது. 



சின்னம்மை ஒரு தொற்று நோயாகும். இதனால் பொக்களம், அரிப்பு, களைப்பு மற்றும் காய்ச்சல் உண்டாகும். இருமுவதனாலும் தும்முவதனாலும் காற்றின் மூலம் சின்னம்மை பரவும். கொப்புளங்களில் இருந்து வெளிப்படுபவற்றைத் தொடுவதாலும் மூச்சின் வழி உள்ளிழுப்பதாலும் உண்டாகக் கூடும்.ஜோஸ்டர் என்ற வைரசினால் உண்டாகிறது. நோயுள்ள ஒருவர் மூலம் பரவும் இந்நோயின் நோயரும்பும் காலம் 10-21 நாட்கள் ஆகும்.        



 


தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், நோயின் தீவிரத் தன்மைக்கு எதிரான பாதுகாப்பைக் கொண்டுள்ளனர். இருப்பினும், தடுப்பூசி செலுத்திய பிறகும் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள்(Breakthrough Infection) , தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு இணையாக நோய்த் தொற்றை பரப்புகின்றனர். தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒருவருக்கும், தொண்டை மற்றும் நுரையீரலில் இருக்கும் மெல்லிய செல்களைக் கொண்ட புறப்படலத்தை இந்த வைரஸ் தாக்குகிறது.  


உருமாற்றம் பெற்ற கொரோனா வகைகள், சார்ஸ் - கோவ்- 19 வைரஸில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாய் தோன்றுகிறது. கனடா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து  ஆகிய நாடுகளில்டெல்டா பாதிப்பு அதிக கொரோனா உயிரிழப்புகளையும், மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.    


புதிய உருமாறிய டெல்டா வகை தொற்று அதிகம் பரவக்கூடியது. தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் செயல்பாடுகளை குறைக்கும் தன்மை கொண்டது. அறியப்பட்ட பதிப்புகளை விட கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அதிகாரிகளுக்குள் (சிடிசி) அனுப்பட்ட ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 



கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களுக்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.முகக் கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். 


 


 


டெல்டா வகை கொரோனா: 


பி.1.617.2 என்ற கொவிட்-19 வகை, டெல்டா வகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று, நாடு முழுவதும்  இரண்டாவது அலை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது ஏற்படும் புதிய பாதிப்புகளில் 80%, இந்த வகை தொற்றாகும். மகாராஷ்டிராவில் உருவாகிய இந்தத் தொற்று, வடக்கு நோக்கி நகர்ந்து நாட்டின் மேற்கு மாநிலங்களிலும் அதைத்தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.


மனித உயிரணுக்களில் புகுந்த பிறகு இந்த தொற்று வகை வேகமாகப் பரவுகிறது. நுரையீரல் போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.