கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கி மூன்று  ஆண்டுகள் ஆகிய நிலையில் மக்களுக்கு இன்றளவும் பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது, கொரோனா, டெல்டா கொரோனா, ஒமிக்ரான் அதனை தொடர்ந்து தற்போது NeocoV  என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.




முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிகள் என தடுப்பூசிகளும் அதிகரிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது உலக  நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 -வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரத்து 277 பேர் பாதிப்புக்குள்ளாகி, அதில் 26 ஆயிரத்து 893 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ள சூழலில் இன்று  மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கும் கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 7 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 330 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.




கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய அரசு முழு வீச்சில் நாடு முழுவதும் பல இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை  26 லட்சத்து  95 ஆயிரத்து 273 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 




முதல் தவணை தடுப்பூசியும் 13 லட்சம் 18 ஆயிரத்து 634 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 12  லட்சத்து 23 ஆயிரத்து 822 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 1 லட்சத்து 52 ஆயிரத்து 817 பேருக்கு செலுத்தியுள்ளனர்.  இதில் ஆண்கள் 12 லட்சத்து 12 ஆயிரத்து 498 பேரும், பெண்கள் 13 லட்சத்து 29 ஆயிரத்து 365 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 595 பேரும்  தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  இதில் கோவாக்சின் 3 லட்சத்து 61 ஆயிரத்து   426 பேருக்கும்,  கோவிஷீல்ட்  22 லட்சத்து 59 ஆயிரத்து 517 பேருக்கும் கோர்பேவாக்ஸ் 74 ஆயிரத்து 298 பேருக்கு  போடப்பட்டுள்ளது.  


தருமபுரி: முறைகேட்டில் ஊராட்சி மன்ற தலைவர்கள்..? - ஆட்சியர் அலுவலகத்தில் உறுப்பினர்கள் தர்ணா