கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு  நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுப்பிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது, கொரோனா, டெல்டா கொரோனா, ஓமிக்ரோன் அதனை தொடர்ந்து தற்போது NeocoV  என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிகள் என தடுப்பூசிகளும் அறிமுகம் ஆகும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது உலக வல்லரசு நாடுகளுக்கே பெரும் சவாலாக இருந்தது வருகிறது.




இந்த சூழலில் தமிழ்நாட்டின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 26 ஆயிரத்து 496 பேர் பாதிப்புக்குள்ளாகி, அதில் 26 ஆயிரத்து 166 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுடன் 22 நாட்களாக  மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கும்  கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்படவில்லை, மேலும் கடந்த 21 நாட்களாக  சிகிச்சையில் ஒருவரும் இல்லாததை அடுத்து மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து 21 நாளாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற நிலையில் இருந்து வருகிறது.  இதுவரை மாவட்டத்தில் 330 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.




கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் நாடுமுழுவதும் பல இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி செயல்பாட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை  19 லட்சத்து  34 ஆயிரத்து   21  நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


முதல் தவணை தடுப்பூசியும் 10 லட்சம் 83 ஆயிரத்து  999 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 43 ஆயிரத்து 202 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 6 ஆயிரத்து  820  பேருக்கு செலுத்தியுள்ளனர்.  இதில் ஆண்கள் 8 லட்சத்து 99 ஆயிரத்து  470  பரும், பெண்கள்  10  லட்சத்து 27 ஆயிரத்து  391  பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள்  340 பேரும்  தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  இதில் கோவாக்சின் 2  லட்சத்து  39  ஆயிரத்து  30  பேருக்கும்,  கோவிஷீல்ட்  16  லட்சத்து   72  ஆயிரத்து 336  பேருக்கும்  போடப்பட்டுள்ளது.