தமிழ்நாடு முழுவதும் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கோயமுத்தூர் ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாமல் வருகிற 28-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதி வேகமாக குறைந்து வருகிறது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 103 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக மாவட்டம் முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 936 நபர்கள் மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் நாளில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து இன்று வரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 238 நபர்கள் சிகிச்சையிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் இவர்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்ற பின்னரும் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

 

ஒட்டுமொத்தமாக தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,176 நபர்களாக உயர்ந்துள்ளது.  மேலும் இவர்களில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 34,933 நபர்கள் ஆகவும் உயர்ந்துள்ளது. ஆகமொத்தம் தற்போது அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 936 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள காயத்திரி கிருஷ்ணன் அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், அரசின் உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் பல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணியினை நேரடியாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.