தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 100 சதவீதம் கரோனோ தடுப்பூசி செலுத்திய ஊராட்சி சார்பில் இன்று காலை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து சுகாதாரப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு இதுதொடர்பாக பரிந்துரையை வழங்கியுள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் சோழன்மாளிகை ஊராட்சி உள்ளது. இங்கு 9 வார்டுகளில் 962 வீடுகள் உள்ளது. இதில் 18 வயதுக்கு மேல் 1,950 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தப்பட்டு, 100 சதவீதம் பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.



விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். விழாவில் பட்டீஸ்வரம்  வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரேமா, மருத்துவ அலுவலர் புனிதவதி மற்றும் சுகாதார பணியாளர்கள், ஊராட்சி மன்ற செயலர்,  ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயக்குமார் கூறுகையில்,


கொரோனா முதல் அலை வந்தபோது நாங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக  கடைபிடித்தோம். மேலும் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலை வந்தபோது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வீட்டுக்கு வீடு சென்று மருத்துவப் பரிசோதனைகள் செய்தும், முகக்கவசங்களையும் வழங்கினோம், வாரம் இருமுறை ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


முதன்முதலாவதாக தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தொளிக்கப்பட்டது எங்கள் ஊராட்சியில்தான். வாரந்தோறும் இரண்டு முறை அனைத்து தெருக்களில் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடரை தெளித்து வருகின்றோம். எங்கள் ஊராட்சிக்கு தேவையான அளவில் கிருமி நாசினி பவுடர்கள் இருப்பு உள்ளன. ஊராட்சி முழுவதுமுள்ள சுவர்களில் கொரோனோ விழிப்புணர்வு சுவரொட்டிகளும், எச்சரிக்கையும் வரையப்பட்டது. இதனால் கிராம மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தனர்.



கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழி்ப்புணர்வு ஏற்படுத்தி கிராமத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்றார்.


இதுகுறித்து பட்டீஸ்வரம் அரசு வட்டார துணை மருத்துவமனை மருத்துவ அலுவலர் புனிதவதி கூறுகையில்,


பட்டீஸ்வரம் மருத்துவமனைக்கு 11 ஊராட்சிகள் உள்ளது.  இதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 38 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதும், சோழன்மாளிகை ஊராட்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். அதன்படி 18 வயது நிரம்பிய 1,950 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கோவிஷில்ட், கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்று பாதிப்பில்லாமல் கண்காணித்து வருகின்றோம்.


தற்போது இந்த ஊராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, இதன் விவரத்தை  மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளோம். தமிழக அளவில் இந்த ஊராட்சி மூன்றாவது ஊராட்சியாகவும், தஞ்சை மாவட்ட அளவில் முதல் ஊராட்சியாகவும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியாக சுகாதாரத் துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதையடுத்து இந்த கிராம மக்கள் சார்பில் இன்று,  சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது என்றார்.