கட்டுப்பாடுகளுக்கு தளர்வு:


கோவிட் தொற்றுநோயை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் வகையில் சீனாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை ரத்து செய்ய சீனா முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஃபைசரின் கோவிட் மருந்து பெய்ஜிங்கில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனா மெதுவாக கோவிட் உடன் வாழத் பழகி வருகிறது. இதனால் கொரோனா தொடங்கியதிலிருந்து சீரோ கோவிட் கட்டுப்பாடுகள் அமல் படுத்தி வந்த நிலையில் அதனை தற்போது சீன அரசாங்கம் தளர்த்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக,  வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இனி தனிமைப்படுத்த அவசியம் இல்லை என தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.


புதைக்கக்கூடிய இடமில்லாத நிலை:


இந்த புதிய விதி ஜனவரி 8 முதல் அமலுக்கு வருகிறது. ஜனவரி 8ஆம் தேதி முன் வரை சீனாவில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் 5 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். சீனா தனது சீரோ கோவிட் பாலிஸியை தளர்த்தியது உலக நாடுகளால் உற்று நோக்கப்பட்டது.  சீனாவில் கிராமப்புற நகரங்கள் தொற்றுநோய் பரவலை சமாளிக்க போராடும் போது கூட சமீபத்திய நடவடிக்கை வந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது, அதேபோல் சுடுகாடுகளில் இறந்தவர்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  தினசரி கோவிட் எண்ணிக்கையைப் சீனா தெரிவிப்பதை நிறுத்திவிட்டது. மேலும் கட்டாய கொரோனா பரிசோதனை தளர்த்திய நிலையில் உண்மையான தினசரி பாதிப்பு என்ன என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.  


பரிசோதனை கட்டாயம் இல்லை:


தரவுகளின்படி இனி சர்வதேச பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை இல்லை என்றும், காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் சீனாவிற்கு வருவதை  எளிதாக்கும் வகையில் தடைகள் தளர்த்தப்பட்டதாக சீனாவின் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.


ஆனால் அதில் சுற்றுலாப் பயணிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்களுக்கான முக்கியமான வருவாய் ஆதாரமாக இருக்கும் சுற்றுலாவை மேம்படுத்த சீனக் குடிமக்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல படிப்படியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடும் பரிசோதனை, தனிமைபடுத்துதல் ஆகியவை சீன மக்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்தது.


இதனால்  சர்வதேச பயணிகள் சீனாவிற்கு வர தயக்கம் காட்டி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இருப்பினும், சீனாவிற்கு வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 


அதிகரிக்கும் கொரோனா:


மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, வரும் நாட்களில் தலைநகர் பெய்ஜிங்கின் சமூக சுகாதார மையங்களுக்கு ஃபைசரின் கோவிட் மருந்தான பாக்ஸ்லோவிட் விநியோகிக்க சீனா முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரண்டு முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கோவிட் சிகிச்சைக்கான ஒரே வெளிநாட்டு மருந்தாக பாக்ஸ்லோவிட் உள்ளது, இது சீனாவின் கட்டுப்பாட்டாளரால் நாடு தழுவிய பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


முதியவர்களிடையே தடுப்பூசி விகிதத்தை மேலும் அதிகரிப்பதையும், கடுமையான நோய் அபாயத்தில் உள்ள மக்களிடையே இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கவும் சீனா முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் காய்ச்சல், இரத்த உறைவு மற்றும் பிற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில்  முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். சுகாதார ஆணையம் இந்த மாதத்தில் ஆறு கோவிட் இறப்புகளை மட்டுமே பதிவு செய்துள்ளது, இது நாட்டின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை 5,241 ஆக உயர்ந்துள்ளது.