பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்த கூடிய கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வரும் பிப்ரவரி மாதம் முதல்  மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த வாரம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் உள்ள இந்தியாவின் தடுப்பூசி பரிசோதனை ஆய்வகத்திற்கு 15,000 க்கும் மேற்பட்ட டோஸ்கள் சென்றடைந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த டோஸ்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


நாசிவழி தடுப்பூசி:


பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) மறுசீரமைப்பு நாசி தடுப்பூசி iNCOVACC என்று அழைக்கப்படுகிறது. இதுவே இந்தியாவின் முதல் நாசிவழி கொரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் நாசிவழியாகத்தான் நம்மை ஆட்கொள்கிறது என்பதால் இந்த iNCOVACC தடுப்பூசியை நாசி வழியாக செலுத்தும் போது இது மூக்கிலேயே அதாவது வைரஸ் நுழைவுவாயிலிலேயே அதனைத் தடுக்கவல்லது. இந்நிலையில் இதனை பூஸ்டராக ஆறு மாத இடைவெளியில் இரண்டாவது தவணையில் எடுத்துக் கொள்வதால் கொரோனா தொற்றிலிருந்தும், பரவலில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.


முன்னதாக கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி டிசிஜிஐ இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி கொரோனா பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் iNCOVACC பூஸ்டருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.


ஏற்கெனவே பெரும்பாலான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி மூக்கு வழியாக கொடுக்கப்படுகிறது. இது மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கொரோனா உட்பட காற்றில் பரவும் பெரும்பாலான நோய்களின் வேர் முக்கியமாக மூக்கு என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது அத்தகைய நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


செலவு குறையும்:


நாசி ஸ்ப்ரே தடுப்பூசியால் கைகளில் செலுத்திக் கொள்ளும் ஊசியிலிருந்து விடுதலை கிடைக்கும். சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி தேவையில்லை. குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடுவது எளிதாக இருக்கும். எல்லாவற்றையும் விட செலவு குறைவு என்பதால், உலகெங்கிலும் விநியோகம் செய்யலாம். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் சுமார் 4,000 தன்னார்வலர்களுடன் நாசி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்தது. இதுவரை எந்த பக்க விளைவுகளும் அல்லது பாதகமான எதிர்வினையும் இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.


2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. டெல்டா திரிபு தீவிர உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய நிலையில் கடைசியாக வந்த ஒமிக்ரான் திரிபு சற்று குறைவான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இதுவரை வேறு பயங்கரமான திரிபு ஏதும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனால், மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட பூஸ்டர்கள் செலுத்திக் கொண்டால் ஆன்ட்டிபாடிகளை அதிகப்படுத்தி புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் வரும்போது நம்மை தீவிர பாதிப்பில் இருந்து மரணத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 


பிப்ரவரியில் நாசிவழி தடுப்பூசி:


அண்மைக்காலமாக சீனாவில் அன்றாட கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் நாம் பூஸ்டர் டோஸ்களை செலுத்திக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றன்றனர். இந்நிலையில் மூக்கின் வழியே செலுத்தி கொள்ள கூடிய தடுப்பூசி பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.