தமிழ்நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில். நேற்றைய தினம் கொரோனா காரணமாக 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த மூன்று அலைகளை ஒப்பிடும் போது இந்த முறை தொற்று பரவல் மிகவும் குறைவாக தான் உள்ளது. மேலும் சமூக பரவல் இல்லை என்ற காரணத்தால் இதனை நான்காம் அலை என கருத முடியாது என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 500 ஐ கடந்து பதிவாகி வருகிறது.


நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 3,563 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 542 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், 432 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.


அரபு அமிரகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு வெளிநாட்டி பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று தமிழ்நாடில் 6,238 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 542 மாதிரிகளில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 36,03,805 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும் போது குறைவாக பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில் 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 934 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொற்று பாதிப்பு 1000 ஐ நெருங்குகிறது. தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் மெதுவாக உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், கோவை – 11.9%, கன்னியாகுமரி – 11.5%, ராணிபேட் – 11%, செங்கல்பட்டு – 11.5%, திருவள்ளூர் – 10.8%, சேலம் – 10.9%, திருச்சி – 10.5%, சென்னை – 9.7%  ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவின் Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் மாறுபாடு தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. 


இருப்பினும் தொற்று பரவும் சதவீதம் குறைவாக தான் உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 90 வயது முதியவரும், சென்னையை சேர்ந்த 59 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் குறைவாக இருந்தாலும் சமூக பரவலாக மாறாமல் இருக்க மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை தரப்பில் அறிவிறுத்தப்பட்டுள்ளது.