தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.  தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 585 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 1,584, வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,585 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 04 ஆயிரத்து 074 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 42 ஆயிரத்து 902 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 165  நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 165 ஆக குறைந்துள்ளது. கோவை 190, ஈரோடு 138, தஞ்சை 98, சேலம் 79, செங்கல்பட்டு 92, கடலூர் 69, திருப்பூர் 65, திருச்சி 46, திருவள்ளூர் 60, நாமக்கல் 44, வேலூர் 42, கள்ளக்குறிச்சி 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


கொரோனாவால் மேலும் 27  பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,761 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 3 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8386 பேர் உயிரிழந்துள்ளனர்.


 






அதிகபட்சமாக  திருப்பூரில் 5 பேரும், கோவையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,603 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,842 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,50,710 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


12 வயதிற்குட்பட்ட 88 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 46,191 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25,896 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8846 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 


பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 


Chennai Earthquake: சென்னையில் நில அதிர்வு: நுங்கம்பாக்கம், பூந்தமல்லி பகுதியில் உணரப்பட்டது!