இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,331 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.


இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி தொற்று  2000க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 1,839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று புதிதாக 1,331 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது குறைவாகும். இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக குறைந்துள்ளது.


இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,44,18,351 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,692ல் இருந்து 5,31,707 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  கடந்த வாரம் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது இன்று 25,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. 22,742 பேர் மொத்தமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 6092 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 1527 பேர், தலைநகர் டெல்லியில் 709 பேர், உத்தர பிரதேசத்தில் – 1212 பேர், தமிழ்நாடு – 1035 பேர், ஹரியானாவில் – 815 பேர், குஜராத்தில் – 433 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 22,742 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,44,767 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா தொற்று 65,000 கடந்த நிலையில் தற்போது அது படிப்படியாக குறைந்து வருகிறது. தலைநகர் டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை 1000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் 3 பேர், கர்நாடகாவில் 2 பேர், டெல்லியில் 2 பேர், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தமாக 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தினசரி தொற்று 100 க்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 272 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 1,035 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.