கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

 
கோடை வெயில்
 
தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.
 
நுகர்வோர்களின் கவனத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்
 
1. கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லையெனில், அக்கடையில் எவ்வித உணவுப் பொருளையும் வாங்கக்கூடாது.
2. பழரசம்/ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.
3. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கபட்டிருந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கவும்.
4. குளிர் பானங்கள் பழரசங்கள் நேரடியாக குளிர்பெட்டியி
லிருந்து பெறுவது நல்லது.  உணவு வணிகர் ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் வாங்கும் முன்னர் ஐஸ்கட்டிகள் உணவுத் தரம் வாய்ந்தவையா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
 5. திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.
6. நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 7. தங்களது கலோரியின் தேவைக்குட்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) போன்றவற்றை மிகவும் குறைவான அளவுடன் எடுத்துக்கொண்டு பழரசம் இளநீர் பதநீர் கரும்பு ஜுஸ் கூழ் வகைகள் போன்ற இயற்கை திரவ ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 8. பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி காலாவதி நாள் உள்ளிட் அனைத்து லேபிள் விபரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
9. காரம் மிகுந்த மற்றும் அதிகம் சூடான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
10. நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம் 
எனவே, கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர்களும் திரவ ஆகாரங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  தெரிவித்துள்ளார்.