நம் உடல் என்பது பல்வேறு உறுப்புகளின் சங்கமமாக உள்ளது. இவை அனைத்து ஆரோக்கியமாக ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் பிரச்னை என்றால் ஒட்டுமொத்த உடலும் கோளாறாகி விடும். இப்படியான உடலில் சேரும் கழிவுகள் வியர்வை, சிறுநீர், மலம் வழியாக வெளியேறுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலரும் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை வயது வித்தியாசமில்லாமல் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அலுவலகங்களில் ஏசியில் வேலை பார்ப்போர் நிலைமை இன்னும் மோசமாகி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏசி போன்ற குளிர்கால நிலை கொண்ட இடங்களில் அமர்ந்தால் அடிக்கடி சிறுநீர் வருமே என்ற கேள்வி பலருக்கும் வரலாம். அதுதான் கிடையாது. சிறுநீர் கழிக்கும்போது அசௌகரியம், எரிச்சல் அல்லது வலியை உணரும் ஒரு நிலையை நாம் உணர்கிறோம். இது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அதற்கான தீர்வு என்ன என்பதைக் காணலாம்.
பிரச்னைக்கான காரணம்
உடலில் நீர்ச்சத்து குறைபாடு தான் இத்தகைய பிரச்னைக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. காரணம் ஏசி அறையில் இருப்பதால் தாகம் எடுப்பதே கிடையாது. வலுக்கட்டாயமாக தண்ணீர் குடிப்பவர்களும் குறைவு. இதன் காரணம் சிறுநீர் போதிய அளவு வராமல் போகிறது. ஆனால் அடிவயிற்றி சிறுநீர் வருவது போல உணர்வு மட்டும் உண்டாகும். அதேசமயம் சிறுநீர் கழிப்பதில் தாமதம், கழிக்கும்போது அசௌகரியம், எரிச்சல் அல்லது வலி போன்ற உணர்வுகள் உண்டாகும்.
Also Read: மழைக்காலத்தில் தலைவலியாக அமையும் பல் பிரச்னை.. சிகிச்சையே இல்லாமல் தீர்ப்பது எப்படி?
இது சிறுநீர் தொற்று ஏற்படவும் வழி வகுக்கலாம். சிறுநீர் கழித்து முடித்த பிறகு ஏற்படும் எரிச்சல் சிறுநீர் பாதையில் அழற்சியின் அறிகுறியாக இருக்கும். நீங்கள் எப்போது சிறுநீர் கழித்தாலும் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். தாமதமாக கழிப்பதால் ஏற்படும் உணர்வு என நினைக்கலாம். கடுமையான துர்நாற்றம் வீசலாம். இது நோய்த்தொற்றின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
மேலும் ஏசியில் இருப்பதால் நம் தோலில் உள்ள ஈரப்பதம் மற்றும் வியர்வை ஆகியவை விரைவாக ஆவியாகி விடும். போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் பாக்டீரியாக்கள் பெருகி தொற்று ஏற்படும் சூழல் உண்டாகும்.
தீர்வு தான் என்ன?
தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் குறைந்தப்பட்சம் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையாவது தண்ணீர் குடியுங்கள். வெதுவெதுப்பான நீர் என்றால் இன்னும் சிறப்பானது. ஏசி அறையிலேயே இருப்பதால் அடிக்கடி டீ அல்லது காபி குடிப்பது, காரமான உணவுகள் உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது உடலை வறட்சியாக்குவதோடு, நம்மை சோர்வில் தள்ளும்.
பல மணி நேரமாக சிறுநீர் வரவில்லை என்ற பிரச்னை ஒருநாள் இருந்தால் பரவாயில்லை. தொடர்ச்சியாக தண்ணீர் குடித்த பிறகும் வரவில்லை என்றால் அல்லது சிறுநீர் கழிக்கும்போது தாங்க முடியாத வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமானதாகும்.
