ரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்க இரும்புச் சத்து அவசியம். சிவப்பு அணுக்கள் தான் ரத்தக் குழாய்களுக்கு பிராண வாயுவை ஏற்றிச் செல்கின்றன. ஆனால் மனிதகுலத்திற்கு பரவலாக ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கிறது இரும்புச் சத்து குறைபாடு. உடலில் ஏற்படும் இரும்ப்புச் சத்து குறைபாட்டிற்கு அனீமியா (ரத்த சோகை) என்று பெயர். இதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டால் தசைகள், திசுக்களுக்கு போதிய ஆக்சிஜன் செல்லாமல் அவை சீராக இயங்க முடியாத சூழல் உருவாகிறது. இதுதவிர சருமம், கேசம், நகங்களில் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு அதிகப்படியான முடி உதிர்தல் இருந்தால் அது அனீமியாவால் இருக்கலாம். ஹீமோகுளோபின் அளவு குறையும் போது கேசத்துக்கான செல்கள் போதிய போஷாக்கு பெறுவதில்லை. தலை வறண்டுவிடும். 


கண்களுக்குள் வெளிர் தோற்றம் ஏற்படுதல்:
கண்ணின் உள்புறத்தில் கீழ் உள்ள பகுதியில் வெளிரிப்போய் இருந்தால் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். இரும்புச் சத்து குறைபாடு இருக்கிறதா என்ற பரிசோதனையில்  மருத்துவர்கள் முதலில் பரிசோதிப்பது இதைத்தான்.


நகங்கள் உடைந்துபோகுதல்:
நகங்கள் உடைந்துபோதல் அனீமியாவால் ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் காயிலோநிச்சியா என அழைக்கின்றனர். இரும்புச் சத்து குறைபாட்டால் உங்கள் நகங்கள் நேராக வளராமல் உள்நோக்கி வளைந்திருக்கும் ஓரங்கள் ஸ்திரமற்று இருக்கும்.


வெளுத்துப் போன சருமம்:
ரத்தசோகை ஏற்பட்டால் உங்கள் உள்ளங்கை, கன்னம் வெளுத்துப்போய் காணப்படும்.
இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடி ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கும் மருந்து, மாத்திரைகளைப் பெறுங்கள்.


அத்துடன் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மூலமும் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டலாம்.


உலர் திராட்சை: 
ரத்த சோகை இந்தியாவில் அதுவும் குறிப்பாக இந்தியப் பெண்களில் சர்வ சாதாரண நோயாக இருக்கிறது. ஆகையால் ரத்த சோகை இருப்பவர்கள் உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் குறிப்பாக கறுப்பு உலர் திராட்சையை உட்கொள்ளலாம். முந்தைய நாள் இரவே அதை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து அதை மிக்ஸரில் அடித்து சாறாக வடிகட்டி தினமும் காலையில் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவில் நல்ல மாற்றம் தெரியும். உலர் திராட்சையில் இரும்புச் சத்துடன் காப்பரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பாலக் கீரை:
பாலக் கீரை அல்லது அமர்நாத் கீரை என்றழைக்கப்படும் இந்த வகை கீரையில் இரும்புச் சத்து அதிகம். இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் விருத்தி அடையும். இந்தக் கீரையை ராஜ்கிரா என்றும் அழைக்கிறார்கள்.


பேரீச்சம் பழங்கள்:
பேரீச்சம் பழங்கள் ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவும். இதில் இரும்புச் சத்து. அதை உடல் கிரகித்துக் கொள்ள உதவும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஃபோலிக் அமிலங்கள் ஆகியன நிறைவாக இருக்கின்றன.


சிறு தாணியங்கள்:


சிறு தானியங்கள் நுண்ணூட்டச்சத்துக்குப் பெயர் பெற்றவை. நாம் அன்றாடம் உணவாகக் கொள்ளக்கூடிய தானியங்களான நெல், கோதுமை ஆகியவற்றில் இல்லாத பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் சிறு தானியங்களில் உண்டு. சிறு தானியங்கள் புரதத்துக்கும், நார்ச்சத்துக்கும் பெயர் பெற்றவை.


இவை தவிர நுண்ணூட்டச்சத்துக்களான இரும்பு, வெண்கலம், மாங்கனிஸ், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவையும் பி வைட்டமின்களையும் சில வகையான அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன. மேலும் உடல் சுகாதாரத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பசையம் (Gluten) இல்லை. ஆகையால் நாம் சிறுதானியங்களை உண்ண வேண்டும்.


வெள்ளை எள்:
வெள்ளை எள், இதில் இரும்புச் சத்து, ஃபோலேட், ஃப்ளேவனாய்ட்ஸ், காப்பர் இன்னும் சில சத்துக்களும் இருக்கின்றன. இவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கப் பயன்படுகிறது.


நாவல் பழம்:
நாவல் பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் பழம் என்று நாம் பொதுமைப் படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால் அதில் அத்தனை சத்துக்கள் உள்ளன. இரும்புச் சத்தைக் கூட்டவல்லது நாவல் பழம். ஆடி மாதம் வந்துவிட்டது நாவல் பழத்தை நன்றாக புசிக்கவும்.