Fact Check: ஜி.யு. போப் புத்தகத்திலேயே திருவள்ளுவர் காவி உடை தான் அணிந்திருக்கிறார் என பரவும், புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


இணையத்தில் பரவும் புகைப்படம்:


ஜியு போப் எழுதிய புத்தக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக புகைப்படம் ஒன்றை தினமலர் பகிர்ந்திருந்தது. அந்த அட்டைப்படத்தைப் பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதோடு, “காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் போட்டு புத்தகம்.. மொழி பெயர்ப்பு ஆர்.என்.ரவி அல்ல ஜி.யு.போப்” என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில்,  அதன் உண்மைத்தன்மைக் குறித்து அறிய ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.




    தினமலர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவின் ஸ்க்ரீன்ஷாட்


புகைப்படத்தின் உண்மைத் தன்மை என்ன?


முதல் முயற்சியாக, வைரலாகும் திருக்குறள் அட்டைப்படத்தில் ஜியு போப் என்கிற பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன்முடிவில், Kobo என்கிற இணையதளத்தில், ஜியு போப் பெயர் இடம்பெற்றுள்ள இப்புத்தக அட்டைப்படம் இருப்பதை நம்மால் காண முடிந்தது. ஆனால், அட்டைப்படத்தில் ஜியு போப் பெயர் பொருந்தாத வகையில் இடம்பெற்றிருந்தது. எனவே மேலும் குறிப்பிட்ட புகைப்படம் குறித்து ஆராய்ந்தோம். அதன்முடிவில், Satguru Sivaya Subramuniyaswami தோற்றுவித்த Himalayan Acadameyயின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள இப்புத்தகத்தில் எழுதியவர் பெயர் “Satguru Sivaya Subramuniyaswami” என்றே இடம் பெற்றிருந்தது.  அதன் விளைவாக புத்தகத்தின் முழுமையான பதிப்பை நாம் தேடினோம். அதன் முடிவில் Himalayan Acadamey இணையதளப்பக்கத்திலேயே இதன் PDF பதிப்பு நமக்குக் கிடைத்தது.





      சமூக வலைதள பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்


அதன் பதிப்புரை பக்கத்தில் “The cover art and the image of lord murugan opposite the title page are by Thiru. S. Rajam of Chennai.”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓவியத்தில் உள்ள ஓவியரின் கையெழுத்தும் ”S Rajam – A Rare Gem Indeed ” என்கிற பெயரில் சுந்தரம் ராஜம் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ள பக்கத்தில் உள்ள ஓவியங்களில் உள்ள கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருந்தது.


அதனடிப்படையில், ஓவியர் எஸ் ராஜமின் மருமகனும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பவருமான வி.எஸ்.ரமணாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது குறிப்பிட்ட அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் சுந்தரம் ராஜம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும், HIMALAYAN ACADEMY MUSEUM OF SPIRITUAL ART பக்கத்தில் எஸ்.ராஜம் வரைந்த தேர்ந்தெடுத்த 108 திருக்குறள்களின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராஜம் 1919ஆம் ஆண்டு பிறந்து 2010ஆம் ஆண்டு மறைந்தவர் என்பதும், ஜியு போப் வாழ்ந்த காலகட்டம் அதற்கும் முந்தையது என்பதும் குறிப்பிடத்தக்கது.




    சத்குரு சிவாய சுப்ரமணிய சுவாமிகள் எழுதிய புத்தகத்தின் முகப்பு படம் 


தொடர்ந்து, சிவாய சுப்ரமணிய சுவாமிகள் எழுதிய புத்தகத்தில் அவருக்கு முன்பாக திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்தவர்கள் என்கிற Resources பகுதியில்தான் ஜியு போப் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




         சிவாய சுப்ரமணிய சுவாமி எழுதிய புத்தகத்தின் பதிப்புரை 


தீர்ப்பு:


ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக பரவிய செய்தி தவறானது என்பது ஆய்வின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம்.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.