மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், “ஏன் இஸ்லாமியர் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளா இருக்காங்களா? தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா?” என்ற கேப்ஸ உடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், இஸ்லாமிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறி இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

Continues below advertisement

Fact-check:

Continues below advertisement

நாம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இத்திட்டம் அனைத்து மதத்தின்ருக்கானதும் என்றும் தெரியவந்தது.

வைரலாகும் தகவல் குறித்த உண்மை தன்மையை ஆராய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் அதே புகைப்படம் தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் கடந்த மார்ச் 3ஆம் தேதி இது தொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.423.18 கோடி மதிப்பீட்டிலான 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், வைரலாகும் அதே புகைப்படம், “பெண் ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்ற கேப்ஷனுடன் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும், செய்தியில் எந்த இடத்திலும் இத்திட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது என்று குறிப்பிடப்படவில்லை.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் நாகப்பட்டினத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி பெட்ரோல் வாகனத்தை பெற்றுக்கொண்ட டில்லி பாபு என்கிற மாற்றுத்திறனாளி பயனாளர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைக் கொண்டு இத்திட்டமானது அனைத்து மதத்தினருக்குமானது என்று தெரிய வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் இணையதளத்தில் இத்திட்டத்திற்கான இரண்டு தகுதிகளாக, 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும், இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கும் இஸ்லாமியர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

Conclusion:

முடிவாக நம் தேடலில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கப்படுவதாக வைரலாகும் தகவல் உண்மை இல்லை என்றும் இத்திட்டம் அனைத்து மதத்தினருக்குமானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக News Meter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.