பிரபல யூடியூபர் இர்ஃபான் தன் திருமண புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு நெட்டிசன்கள் உற்சாகமாக வாழ்த்து கூறி வருகின்றனர்.


யூ டியூபர் இர்ஃபான்:


இன்றைய இணைய உலகில்  திரைப் பிரபலங்களுக்கு சரிசமமாக ரசிகர்களைப் பெற்று வெற்றிகரமாக வலம் வந்து திறமையாக சம்பாதித்தும் வருபவர்கள் யூடியூபர்கள். அப்படி தமிழில் உள்ள ஏராளமான யூடியூபர்களில் முன்னோடியாகவும், பல ரசிகர்களைக் கொண்டும் வலம் வருபவர் உணவுப் பிரியரான யூடியூபர் இர்ஃபான்.




உணவு vlogger மற்றும் ரிவ்யூவரான இவரது யூடியூப் சேனலை 3.56 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். உள்ளூர் உணவு முதல் வெளிநாட்டு உணவுகள் வரை 'ஒரு புடி' பிடித்து வீடியோக்களை பதிவேற்றும் இர்ஃபானுக்கு மொழி கடந்தும், நாடு கடந்தும் ரசிகர்கள் உள்ளனர்.


“தூணிலும் இர்ஃபான், துரும்பிலும் இர்ஃபான்” என நடிகர் கமல்ஹாசனே இர்ஃபானை நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டிய நிலையில், அவரது வளர்ச்சி பலரையும் புருவம் உயர்த்திப் பார்க்க வைத்தது.


திருமணம்:


மேலும் திமுக எம்பி கனிமொழி தொடங்கி, பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், செலிபிரிட்டிகள் என நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வீடியோக்களை இர்ஃபான் இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார். 


இந்த நிலையில் இர்ஃபானுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது . தனது மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள இர்ஃபான் தெரிவித்திருப்பதாவது:




”திருமதி. இர்ஃபானுடன் இறுதியாக இணைந்துவிட்டேன்.  என் வாழ்வின் காதலை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன். யாருக்காக என் இதயம் என் வாழ்நாளின் இறுதி வரை துடிக்குமோ, அவரைத் திருமணம் செய்துகொண்டேன்.


எனது அடுத்த கட்ட வாழ்க்கைக்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தேவை!
எனது திருமண வீடியோவை விரைவில் பதிவேற்றுகிறேன் நண்பர்களே!” என இர்ஃபான் பதிவிட்டுள்ளார்.


கமல்ஹாசன் வாழ்த்து


முன்னதாக தன் நிச்சயதார்த்த விழாவுக்காக தன் தாய் மற்றும் சகோதரியுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கி அழைப்பு விடுத்தார்.


இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், இர்ஃபான் இன்று தன் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.


முன்னதாக 2021ஆம் ஆண்டு இர்ஃபானுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று  ஆறு மாத இடைவெளியில் திருமணம் நடைபெறுவதாகக் கூறப்பட்ட நிலையில், அந்தத் திருமணம் தடைபட்டது. மணப்பெண்ணின் கருத்துக்களும் இர்பான் கருத்துக்களும் ஒத்துப்போகாத காரணத்தால் தனது திருமணத்தை நிறுத்தியதாக இர்ஃபானே வீடியோ ஒன்றைப் பதிவிட்டு கூறியிருந்தார்.




மேலும் இந்தச் சம்பவத்தால் தான் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இர்ஃபான் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தற்போது மகிழ்ச்சியாக இந்தத் திருமண வாழ்வில் இர்ஃபான் காலெடுத்து வைக்க உள்ளது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.