கார் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நடிகை யாஷிகா, சாதாரணா வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் விபத்துக் குறித்தும் தோழியின் மறைவு குறித்தும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,


என்னுடைய தற்போதைய உணர்வுகளை வெளிக்காட்ட முடியவில்லை. நான் உயிரோடு இருக்கவே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்வதா? அல்லது என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடம் இருந்து பிரித்துச் சென்றதற்கு பழி சுமத்துவதா? தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் பவனி. நீ என்னை மன்னிக்க மாட்டாய் தெரியும். என்னை மன்னித்துவிடு. நான் உன் குடும்பத்தை இப்படியான கஷ்ட நிலைக்கு தள்ளிவிட்டேன். நான் எப்போதுமே உயிரோடு இருக்க குற்றவுணர்ச்சியாகவே இருப்பேன். உன் ஆன்மா சாந்தியடை வேண்டும் என எண்ணுகிறேன்.நீ என்னிடம் திரும்ப வர வேண்டுமென பிரார்த்திக்கிறேன். ஒருநாள் உன் குடும்பம் என்னை மன்னிக்கும் என நம்புகிறேன்.  எனத் தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய பிறந்தநாளை நான் கொண்டாட விடும்பவில்லை என்னுடைய ரசிகர்களும் கொண்டாட வேண்டாம்.என்னுடைய தோழியின் குடும்பத்திற்காக பிரார்த்தியுங்கள். கடவுள் அவர்களுக்கு மன உறுதியை கொடுக்க வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். யாஷிகாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றன. உங்கள் தோழியின் ஆன்மா சாந்தியடையும் என்றும், நீங்கள் குற்றவுணர்ச்சியில் தவிக்க வேண்டாமென்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.




முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் நடந்த பார்ட்டியின் நடிகை யாஷிகா ஆனந்த், ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி மற்றும் சையது, அமீர், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பின்பு  கடந்த 24ஆம் தேதி இரவு  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி சென்றுள்ளனர். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நடிகையின் பெண் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.


இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடிகை யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் நடிகை யாஷிகாவுக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. கடந்த ஐந்து நாட்களான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யாஷிகா பின்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.