தன் சிறு வயது முதல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையுடன் வலிய வந்து, பல தோல்விகள், வெற்றிகளைக் கடந்து ஹீரோவாக தற்போது திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் அருண் விஜய்.


அருண் விஜய் - ஹரி கூட்டணி


இவர் தனது தங்கை ப்ரீத்தாவின் கணவரும், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருப்பவருமான இயக்குநர் ஹரியுடன் முதன்முறையாக கூட்டணி வைத்து உருவாகியுள்ள படம் ‘யானை’.


இத்திரைப்படம் வரும் ஜுன் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. Drumsticks Productions சார்பில், தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


ட்ரெய்லர் வெளியீட்டு விழா


முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 


இந்நிலையில், இந்நிகழ்வினில்  பேசிய இயக்குனர் ஹரி, “நானும், அருண்விஜய்யும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது.


பெரிய பட்ஜெட் படம்






இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த மூன்று ஆண்டுகள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தை கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுகொண்டேன், பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளேன்.


சேவல் படத்துக்கு பிறகு ஜிவியுடன் பணி புரிந்துள்ளேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தது. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது. அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.


சமுத்திரக்கனி ஒரு உதவி இயக்குனர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால கட்ட படங்கள் போல் இப்படம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.


ஹரி பேட்டர்ன் இல்ல, புது மாதிரியா இருக்கும்




தொடர்ந்து பேசிய நடிகர் அருண் விஜய், “நானும், இயக்குனர் ஹரியும் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி. அவருக்கு நன்றி.


இந்தப் படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி எனக்கு பெரிய உதவியாக இருந்தார். படத்தின் ஆக்‌சன் பெரிய சவாலாக இருந்தது.


இது ஹரி பேட்டர்னில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்தேன். இந்த படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம். ஹரி கண்டிப்பான மாஸ்டர், அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது.


படத்தை அட்டகாசமாக எடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜிவி உடன் இது எனக்கு முதல் படம். படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். எல்லோருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.


’ஹரியின் வேகம் பிரம்மிக்கத்தக்கது’




அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர், இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்க காரணம் இயக்குனர் ஹரி. அவருடைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருடைய உழைப்பை கணக்கிடவே முடியாது. நடிகர் அருணுக்கு நன்றி.


ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி. சமுத்திரகனி, தலைவாசல் விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பை பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் பெரிய ரசிகை நான். இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. மிக நல்ல உணர்வுபூர்வமான படம், படத்திற்கு ஆதரவு தாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் தவிர, ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி, ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.