சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். படம் ஒரு தரப்பிற்கு பிடித்திருந்தாலும் கூட, பெரும்பான்மையான மக்களுக்கு படம் பிடிக்க வில்லை என்பதை சமூக வலைதளங்களில் உலாவிய விமர்சனங்கள் வாயிலாக அறிய முடிந்தது.


குறிப்பாக கீர்த்தி சுரேஷூக்கும், ரஜினிக்குமான பாசப் பிணைப்பு ஒர்க் அவுட் ஆக வில்லை. திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. இது மிக மிக பழமையான கதை. காமெடி என்ற பெயரில் எதையோ செய்துவைத்திருக்கிறார்கள் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 




இதனால் இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பு கடும் அப்செட் என கோலிவுட்டில் பேச்சு அடிபட்டது. அதே நேரம் நெகட்டிவ் விமர்சனங்கள் எதுவும் படத்தின் வசூலை பாதிக்காது என்றும் சிலர் கூறி வந்தனர். இந்நிலையில் தீபாவளியன்று வெளியான படங்களில் அண்ணாத்த படம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. 


ஒரு பக்கம் வட கிழக்கு பருவ மழை பெய்தாலும், தியேட்டர்களுக்கு அண்ணாத்த திரைப்படத்தை பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று கொண்டுதான் இருக்கின்றனர். கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் உள்ள சக்தி திரையரங்கில் அண்ணாத்த திரைப்படம் திரையிடப்பட்டது. அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்ட இந்தக் காட்சியில், ரசிகர்கள் சிலர் குழுவாக இணைந்து அண்ணாத்த பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோவை அந்த திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






 


அண்ணாத்த படம் வெளியான முதல் நாளில் உலகளவில் மொத்தம் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது எனவும் தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 112 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் அண்ணாத்த படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் 150 கோடி வசுல் செய்திருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது.