'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட  இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ஒய்-பிரிவு பாதுகாப்பு அலுவலர்களுடன் காலை நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.


இந்த ஆண்டு மார்ச் மாதம் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.


காஷ்மீரில் இருந்து 1990ஆம் ஆண்டு பண்டிதர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றது.


இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும், இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன.






அதே சமயம் இப்படம் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவினர் பலரது பாராட்டுகளைப் பெற்றது. மேலும், பாஜக ஆளும் சில மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்கள் பெரும்பாலும் படுதோல்வியை சந்தித்த நிலையில், சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் நாடு முழுவதும் 340 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது.


இதனிடையே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு நான்கு முதல் ஐந்து ஆயுதமேந்திய கமாண்டோக்கள் அடங்கிய ஒய் பிரிவு பாதுகாப்பு முன்னதாக வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒய் பிரிவு கமாண்டோக்களுடன் தான் காலை நேர நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை விவேக் அக்னிஹோத்ரி தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


”ஒரு இந்து பெரும்பான்மை நாட்டில், காஷ்மீர் இந்துக்களின் இனப்படுகொலையை காண்பித்ததற்கு ஒருவர் கொடுக்கும் விலை. இது தான் கருத்து சுதந்திரம்” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இந்நிலையில், தங்கள் வரிப் பணத்தில் விவேக் அக்னிஹோத்ரி கமாண்டோக்களுடன் இவ்வாறு வலம் வருகிறார் என்றும், தேவையற்ற விளம்பரம் செய்கிறார் என்றும் ட்விட்டர் வாசிகள் விவேக் அக்னிஹோத்ரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி முன்னதாக தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


‘தி வேக்சின் வார்’ என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 11 மொழிகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த விவேக் அக்னிஹோத்ரி, அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.


கொரோனா காலக்கட்டத்தில் இந்தியா கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்க போராடிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.