படப்பிடிப்பு ஒன்றின் போது தனக்கு 7 நாட்கள் சாப்பாடு தராமல் இருந்ததாக பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு தெரிவித்துள்ளது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


1974 ஆம் ஆண்டு மஞ்சி மனசுலு என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமான ஜெகபதி பாபு இன்றைக்கு அந்த திரையுலகில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக வலம் வருகிறார். கிட்டதட்ட 1989 ஆம் ஆண்டுக்குப் பின் முழு வீச்சில் நடிக்க தொடங்கிய அவர் 100க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2006 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான மதராஸி படம் மூலம் ஜெகபதிபாபு அறிமுகமானார். 


தொடர்ந்து தாண்டவம், லிங்கா, பைரவா, விஸ்வாசம், அண்ணாத்த, லாபம் என முக்கிய படங்களில் வில்லனாக தோன்றினார். மலையாளத்திலும் புலி முருகன், மான்ஸ்டர் உள்ளிட்ட படத்திலும் ஜெகபதி பாபு நடித்துள்ளார். 


இதற்கிடையில் நேர்காணல் ஒன்றில், சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி நான் சினிமாவுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. ஏராளமான கசப்பான நினைவுகள் இருந்தாலும், அதில் மறக்க முடியாத ஒன்றை தெரிவிக்கிறேன். 1992 ஆம் ஆண்டு சாகசம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். 


அப்படத்தின் 2வது ஹீரோவான எனக்கு படப்பிடிப்பில் 7 நாட்கள் சாப்பாடு கொடுக்கவே இல்லை. யாரும் நான் சாப்பிட்டேனா என்று கூட கேட்கவில்லை. என்னுடைய நிலைமையைக் கண்டு அங்கிருந்த லைட் பாய் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அவமானமான சம்பவம் என் வாழ்க்கையில் நல்ல ஒரு பாடமாக அமைந்தது. கிட்டதட்ட தொடர்ந்து 15 ஆண்டுகள் தெலுங்கில் மட்டும் நடித்து வந்ததால், இங்கேயே இருப்பதால் எப்படி படம் கொடுத்தாலும் செய்வான் என நினைத்து என்னை கேவலமாக பார்த்தார்கள் என ஜெகபதிபாபு கூறியுள்ளார். 


மேலும், அப்போது தான் எனக்கு ஒன்று புரிந்தது. மற்ற மொழிகளில் நடித்து விட்டு வந்தால் மரியாதை கொடுப்பார்கள் என்று. அதேபோல் எனக்கு திருமணம் என்ற சம்பிரதாயத்தில் நம்பிக்கையே இல்லை. என் சின்ன மகளிடம் கூட திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என கூறினேன். திருமணம், குழந்தைகள்  அவர்களின் பொறுப்பை எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னாலேயே இருப்பது சரியல்ல என்று நினைப்பதால் என் மகளிடம் அப்படி சொன்னேன் என ஜெகபதிபாபு அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.