தமிழ் சினிமாவில் 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்னும் திரைப்படம் மூலமாக வில்லனாக கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தவர்தான் நடிகர் விஜய்காந்த். அதன் பிறகு அகல் விளக்கு , சாமந்திப்பூ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில்  1980 ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழுக்கம் என்னும் படம் , தேசிய திரைப்பட விழாவிலும் கூட திரையிடப்பட்டது. நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் பிறகு விஜயகாந்த் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் , நல்ல வசூல் வேட்டையும் நடித்தியது. கோலிவுட்டி முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம்பிடித்த விஜயகாந்த் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், புலன் விசாரணை, சேதுபதி ஐ.பி.எஸ் ,ரமணா உள்ளிட்ட படங்கள் இன்றளவும் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது . இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு விருதகிரி என்னும் திரைப்படத்தில் நடித்த விஜயகாந்த் அதன் பிறகு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.அதன் பிறகு முழு நீள திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமான சகாப்தம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார் விஜயகாந்த்.






 


அதன் பிறகு ‘தமிழன் என்று சொல்லடா’ என்னும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார், ஆனால் திடீர் உடலநல குறைவு காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் திரைப்படம் மட்டுமல்லாமல் அரசியலில் இருந்தும் விஜயகாந்த் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்த்iல் விஜயகாந்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என வெளியான செய்தியே அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்கம் போல கர்ஜிக்கும் விஜயகாந்த்  மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தால் கோலிவுட் வட்டாரமே சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.