விஜயகாந்த் (Vijayakanth) இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது என நடிகை ராதிகா சரத்குமார் கண்ணீர் மல்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமான நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் தீவுத்திடலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பலரும் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிலையில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 4.45 மணியளவில் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

 

இப்படியான நிலையில் நடிகை ராதிகா சரத்குமார், விஜயகாந்த் மறைவையொட்டி புகழாரம் சூட்டும் வகையில் அவர் பற்றி பதிவு ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்! அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர்..!! விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன்..!! தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர்.!!


சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர் ...!! அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது..!! அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் மிகவும் துடித்து போனார்கள்..!! விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது...!!அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்..!!

 

இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது விஜயகாந்த் அவர்களுக்கு அளித்த உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன்...!! ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...!! அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்...!! உங்களால் முடிந்த சிறந்ததை செய்துள்ளீர்கள் விஜி. ஓய்வெடுங்கள்” என தெரிவித்துள்ளார். 

 

விஜயகாந்த் மீது தீராத அன்பு கொண்டவர் நடிகை ராதிகா. இருவரும் இணைந்தால் படம் வெற்றி என்ற நிலை எல்லாம் அந்த காலக்கட்டத்தில் இருந்தது. நானே ராஜா நானே மந்திரி, பூந்தோட்ட காவல்காரன், நீதியின் மறுபக்கம், சிறைப்பறவை,வீரபாண்டியன், உழவன் மகன், தெற்கத்தி கள்ளன் உட்பட  13 படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். விஜயகாந்தை திரைத்துறையில் பக்குவப்படுத்தியவர்களில் ராதிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.