விஜய் டிவியில் கலக்கப் போவது சாம்பியன் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதில் தனித்துவம் பெற்று, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதீத கவனம் பெற்று, அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் புகழ். பெயருக்கு ஏற்றார் போல, விஜய் டிவி புகழாக மாறி வரும்அவர், தனது நீண்ட கால தோழி பென்சியாவை சமீபத்தில் மணந்தார். 


விஜய் சேதுபதி படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம், நடிகர் சந்தானத்தில் ஏஜண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் புகழ், சின்னத்திரையிலிருந்த வெள்ளித்திரையில் படுபிஸியாக உள்ளார். தனது காதலி குறித்து, கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்து புகழ், அது தொடர்பான பதிவுகள் மூலம், லக்ஸ்களை அள்ளி வந்தார். 






விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோயிலில் புகழ்-பென்சியா ஜோடிக்கு நடந்த திருமணத்தில், இந்து முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களும் நடைபெற்றன. மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சூழ உறவினர்கள் வாழ்த்த, சுபநிகழ்வாக நடந்து முடிந்தது புகழ் திருமணம். பிரபலங்கள் பலரும் புகழுக்கு சமூகவலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், அவரது திருமணம் தொடர்பான சர்ச்சை ஒன்று எழுந்து, அதுவும் தற்போது விவாதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், புகழ் சற்று நேரத்திற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி உடன் தன் இருக்கும் ஓவியத்தை , தன் மனைவியுடன் சேர்ந்து வணங்கிய படி நிற்கிறார் புகழ். அந்த பதிவில், 


‛‛இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா...உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா’’






என்று அந்த பதிவில் புகழ் குறிப்பிட்டுள்ளார். மறைந்த பாலாஜியின் திருமண நாளில், தன் மனைவியோடு சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தனக்கு வடிவேலு பாலாஜி தான் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் புகழ்.