யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் 'மாமனிதன்'.


இளையராஜா -யுவன் காம்போ!


இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஸ்டுடியோ 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் இன்று (ஜூன்.17) நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நீங்க நடித்தால் நானும் அப்பாவும் இசையமைக்கறோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி தொடங்கிய படம்தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி இந்தப் படத்தை அப்படித்தான் உருவாக்கியிருக்கிறார்.


’குருசோமசுந்தரம் மாதிரி நடிக்க ஆசை’


நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிப்பட்ட நடிகர் குரு சோமசுந்தரம்.  அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்கக்கூடிய  கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இவர்களுடைய அர்பணிப்பு தான் காரணம்.


பலர் நடிக்க ஒப்புக்கொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிக்கொண்டுவரப்படவில்லை. இந்தப் படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும் இளையராஜாவும் இணைந்து என் படத்துக்கு இசையமைக்கும் இந்த வாய்ப்பு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்தப் படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்கள் அனைவருக்கும் இருக்கும்” என்றார். 


இணைந்த இளையராஜா-யுவன், விலகிய கார்த்திக் ராஜா




அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் சீனுராமசாமி, ”இந்தப் படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று நான் விருப்பபடுகிறேன். முதலில் இந்தப் படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா - இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார்.


இந்தக் கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்தப் படம் ஆரம்பமானது. இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.


இந்தப் படத்தை இளையராஜா வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி, பண்ணைபுரத்தில் இந்தப் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது. நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிக்கொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது.


’காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்கும்’


நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துக் கொடுத்தார். இந்தப் படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்கும்.


இந்தப் படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவுக்கு அர்ப்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது. இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் மக்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்க்கும் மக்கள் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும்” என்றார்.


படத்தின் விநியோகஸ்தர் நடிகர் RK சுரேஷ் பேசுகையில், ”வாழ்வியலை பற்றி படம் எடுக்கும் இயக்குனர்கள் குறைவாகவே உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்தப் படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும்.




விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். காயத்ரிக்கு இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும். அவர் மூன்று வெவ்வேறு வகையான சூழ்நிலையில் தன் நடிப்பை வெளிப்படுத்த வேண்டியது போல கதையமைப்பு இருக்கும். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நான் உறுதியாய் நம்புகிறேன்” என்றார்.


காதல் கதை


நடிகை காயத்ரி இப்படம் குறித்து பேசுகையில், “கிராமம் என்று நமக்குள் இருக்கும் பார்வையை, வேறு கோணத்தில் காட்டுபவர் சீனுராமசாமி சார். இந்தப் படம் ஒரு காதல் கதை. இந்தப் படத்தில் 40 வருட வாழ்க்கை கதை இருக்கிறது. அதற்கான உழைப்பை கொடுத்துள்ளோம்.


இந்தப் படம் நிஜ வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாக வந்துள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் சீனுராமசாமி. இந்தப் படத்தில் யுவன் - இளையராஜா சார் இணைந்து இசையமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பணியாற்றியது என் பாக்கியம்” என்றார்.