விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் இன்று பனையூரில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய ஆலோசனை பற்றி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: “நடிகர் விஜய் சொல்லியதால் இன்று வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்ட வழக்கறிஞர்களும் வந்திருந்தனர், ஆலோசனை செய்துள்ளோம்.


இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:


Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்


சென்னையில் சட்ட ஆலோசனை மையம்


சில கருத்துகளை வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நடிகர் விஜய் இடம் சொல்லப்போகிறோம். சென்னையில் சட்ட ஆலோசனை மையம் விரைவில் தொடங்க இருக்கிறோம்.


விஜய் மக்கள் இயக்கத்தில் இளைஞரணி,  தொண்டரணி,  மாணவரணி, விவசாயி அணி , வர்த்தகர் அணி என பல அணிகள் இருக்கின்றன. அந்த வரிசையில் அங்கீகரிக்கப்பட்ட அணியாக வழக்கறிஞர் அணியை இன்று தொடங்கியுள்ளனர்.


அதில் தற்போது வழக்கறிஞர்கள் அணியிடம் கூட்டம் நடத்தி உள்ளோம். விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த யார் தவறு செய்தாலும் இயக்கத்தில் இருந்து அவர்கள் நீக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.


சட்ட சிக்கல்கள் பற்றி ஆலோசனை


விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளதாக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும்படி விஜய் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியானது.


மாவட்ட நிர்வாகிகளுடன் மட்டுமே இதுவரை சந்திப்பு நடைபெற்று வந்த நிலையில், முதன் முறையாக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வந்தது. 


இந்தக் கூட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டரீதியாக இயக்கம் சந்திக்க நேரிடும் விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


கல்வி பயிலகங்கள் திறப்பு


முன்னதாக விஜய், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.


இந்த நிகழ்வில் தலைவர்கள் காமராசர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்குமாறு மாணவர்கள் மத்தியில் விஜய் பேசிய நிலையில், அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் கவனமீர்த்தது.


தொடர்ந்து, சென்ற ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி பயிலகங்கள் தொடங்கப்படுவதாகவும், இதுவரை 84 பயிலகங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ்நாட்டைத் தொடர்ந்து அடுத்ததாக புதுச்சேரியில் பயிலகங்கள் தொடங்க விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.