திரைப்படங்களில் மிக முக்கிய கதாநாயகராக வலம் வரும் விஜயின், புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவுவது ஆச்சரியம் இல்லை. ஆனால் நேற்று விஜயின், ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில், வைரலாகி பலரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அவ்வப்போது ரசிகர்களை சந்திக்கும் விஜய் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்காமல் இருந்த வந்த நிலையில், சென்ற மாதம் முதல் மீண்டும் நடிகர் விஜய் ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார்.




 

இந்நிலையில் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 4 மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய், சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களால் , கொண்டாடப்படும் புகைப்படம் ஒன்றை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளி ஒருவரை கையில் தூக்கிக்கொண்டு விஜய் எடுத்த புகைப்படம் தான் இப்போதைக்கு சமூக வலைதளத்தில் , ட்ரெண்ட் புகைப்படம். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்களும் மற்றும் நெட்டிசன்களும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர் . இந்த புகைப்படத்திற்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



 

இந்த புகைப்படத்தின் மூலம் வைரலான அந்த நபரின் பெயர், பிரபாகரன் எனவும் அவர் செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது. பிரபாகரன் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டம் எனவும், விஜய் தன்னை தூக்கிய பொழுது அளவுக்கு மீறிய சந்தோஷத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கிறார் பிரபாகரன்.

 

"அந்த நொடி " உயிர் பிரிந்தால் கூட

 

இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில் மாற்றுத்திறனாளியான பிரபாகரனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “நான் 25 ஆண்டுகளாக தளபதி ரசிகனாக இருந்து வருகிறேன். விஜயை எப்பொழுது பிடிக்க ஆரம்பித்தது என்றெல்லாம் தெரியாது. ஆனால் விஜய் எனக்கு உயிர். நடிகர் விஜய் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.



 

மேலும் தொடர்ந்த பிரபாகரன், “உதவியாளர் ஒருவர் என்னை தூக்கிக்கொண்டு, தளபதி அருகே சென்ற பொழுது தன்னைக் குழந்தையாக பாவித்து அவர் கையில் இருந்து, என்னை தூக்கி என்னிடம் ஊர் பெயர் உள்ளிட்டவற்றை கேட்டு தெரிந்து கொண்டார். அந்த நொடியில் எனக்கு அளவுக்கு மீறிய சந்தோஷம், அப்படியே உயிர் பிரிந்தால் கூட போதும் என நினைத்தேன்” என உணர்ச்சி பொங்க பேசினார். தனக்கு விஜய் நடித்த படத்திலேயே வசீகரா படம் என்றால் உயிர் அதை பலமுறை பார்த்ததாகவும், ஒரு ரசிகனுக்கு இதைவிட வேறு என்ன கிடைத்துவிடும், என நெகிழ்ச்சியுடன் நம்மிடம் தெரிவித்தார். என்னுடைய புகைப்படம் வைரலானைத் தொடர்ந்து பலர் எனக்கு போன் செய்து நலம் விசாரிப்பதாகவும் பலர் என்னை நேரில் சந்தித்து பார்ப்பதாகவும், தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் அவர் .பிரபாகரன் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது