விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


ரசிகர்களை கவர்ந்த பிச்சைக்காரன் படம் 


கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான படம் “பிச்சைக்காரன்”. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனியே தயாரிக்கவும் செய்திருந்தார். அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 


 குறிப்பாக “நூறு சாமி இருந்தாலும் அம்மா உன் போல் ஆகிடுமா”  என்ற பாடல் பலரின் ஃபேவரைட்டாக இன்றளவும் உள்ளது. பிச்சைக்காரன் படம் தெலுங்கு மொழியில் பிச்சாகடு என்ற பெயரில்  2016 ஆம் ஆண்டும், 2017 ஆம் ஆண்டு ரோட்சைட் ரவுடி என்ற பெயரில் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இதற்கிடையில் பிச்சைக்காரன் படத்தின் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 


இயக்குநரான விஜய் ஆண்டனி


முதலில் இந்த படத்தை வேறு ஒரு இயக்குநர் இயக்குவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்பின் இயக்குநர் பொறுப்பையும் விஜய் ஆண்டனியே ஏற்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவிலும் நடைபெற்றது. ஜனவரி 17ஆம் தேதி அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி படுகாயமடைந்தார். இதனையடுத்து அடுத்த சில நாட்களில் தான் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.  


முன்னதாக பிச்சைக்காரன் 2 படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. இந்த 2 ஆம் பாகத்தில் காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இதனையடுத்து பாடல்களும் வெளியாக தொடங்கியது. 


தடை விதிக்ககோரி வழக்கு


இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “தன்னுடைய மாங்காடு மூவீஸ் தயாரிப்பில் நடிகரும், இயக்குருமான ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் மூளை என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பின்னர் ஆய்வுக்கூடம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 


இந்த படத்துக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு, 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் கருவானது மூளை மாற்று அறுவைச்சிகிச்சை தொடர்புடையது.  
ஆனால் எனது ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை மற்றும் திரைக்கதையை  அப்படியே காப்பியடித்து 
நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ என்ற படத்தை எடுத்துள்ளார். 


அதன் ட்ரெய்லர் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியானது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. எங்களது அனுமதியி்ன்றி ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்துள்ளதால் இப்படத்தை எந்த தளங்களிலும் வெளியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும். மேலும் ரூ. 10 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார். 


இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் ஆண்டனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், பிச்சைக்காரன் 2 படம் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகவில்லை என்றும், மே மாதம் தான் வெளியாக உள்ளதால் படத்திற்கு தடை எதுவும் விதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.