Vijay Antony: விஜய் ஆண்டனி மகளின் இறுதி சடங்கு நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


விஜய் ஆண்டனி மகள்:


நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் இன்று அதிகாலை தனது வீட்டிற்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகளின் நிலை அறிந்து மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். 12ம் வகுப்பு படிக்கும் மாணவியான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தூக்கம் இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. 


இறுதிச்சடங்கு:


இந்த நிலையில் தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசியதும், பள்ளி நிகழ்வில் அவரது மகள் பங்கேற்ற வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இன்று மாலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்லறையில் இடம் கிடைக்க தாமதம் ஆனதால் நாளை காலை இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.


காலை 8 மணி முதல் 11 மணி வரை இறுதிச்சடங்கு நடைபெறலாம் என கூறப்படுகிறது. இன்று காலை முதல் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு விரைந்த பாரதிராஜா, கார்த்திக், பிரபுதேவா, அருண் விஜய், சித்தார்த், சிம்பு, பார்த்திபன், ஆர்த்தி உள்ளிட்ட பலரும் மறைந்த சிறுமிக்கு இரங்கல் தெரிவித்ததுடன், விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர். 






வீட்டுப்பணிப்பெண்:


இதற்கிடையே விஜய் ஆண்டனி வீட்டில் வேலைப்பார்த்த சந்திரகாந்தி மறைந்த சிறுமி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். சில மாதங்கள் மட்டுமே விஜய் ஆண்டனியின் வீட்டில் சமையல் வேலை பார்த்ததாகவும், இறந்த சிறுமி மிகவும் அமைதியுடன் இருப்பார் என்றும், வீட்டில் அவர் இருப்பதே தெரியாத அளவுக்கு இருப்பார் என்றும் கூறியுள்ளார். விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் அனைவருமே பாசமாக இருப்பார்கள் என்ற சந்திரகாந்தி, பிறந்த நாளைக்கு தன்னிடம் மறைந்த சிறுமி ஆசீர்வாதம் வாங்கியதாகவும் கூறி மன வருத்தப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க: Vijay Antony Video: படிப்பு வேற.. அறிவு வேற; குழந்தைகளுக்கு நெருக்கடி தராதீங்க.. விஜய் ஆண்டனியின் பழைய வீடியோ..


Vijay Antony : வாழ்ந்து தான் பார்க்கலாமே... தற்கொலை மட்டுமே ஒரு தீர்வு அல்ல... நடிகை சுதாவின் வேதனையான கோரிக்கை