தமிழ் சினிமாவில் 2014ஆம் ஆண்டு வெளியான 'பொங்கி எழு மனோகரா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அருந்ததி நாயர். ஆனால் அவருக்கு விஜய் ஆண்டனி நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான 'சைத்தான்' திரைப்படம் நல்ல ஒரு பிரபலத்தைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள், யாவரும் வல்லவரே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 


 




திருவனந்தபுரத்தில் வசித்து வரும் அருந்ததி நாயர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவளம் பைபாஸ் சாலையில் இரவு தனது சகோதரருடன் இருந்த சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சமயத்தில் அடையாளம் தெரியாத வாகனம் எதுவோ ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் நடிகை அருந்ததி நாயர் மற்றும் அவரின் சகோதரர் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுக்கு முதலுதவி செய்ய கூட யாரும் இன்றி அப்படியே கிடந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. பின்னர் அந்த வழியாக பயணித்தவர்கள் பார்த்து தகவல் கொடுக்க, உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அருந்ததி நாயர். இந்த விபத்து குறித்த செய்தியை அருந்ததி நாயரின் சகோதரி ஆரத்தி நாயர் உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.


"தமிழ்நாட்டில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்தியை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மூன்று நாட்களுக்கு முன்னர் என்னுடைய சகோதரி சாலை விபத்தில் சிக்கியது உண்மை தான். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் இதில் இருந்து விரைவில் மீண்டு வர அவருக்காக நீங்கள் ஆதரவும் பிரார்த்தனையும் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். 


 


 



அந்த வகையில் அருந்ததி நாயரின் தோழி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அவருடைய சிகிச்சைக்கு உதவுமாறு போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். "முந்தைய நாள் என்னுடைய தோழி அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். வென்டிலேட்டரில் உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கும் அவரின் மருத்துவ செலவுகள் தாங்க முடியாத அளவுக்கு பெரிதாகி கொண்டே போகிறது. எங்களுடைய பங்கை நாங்கள் செய்து வருகிறோம். இருப்பினும் அது தற்போதைய மருத்துவமனைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. நீங்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அது அவரது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி" என போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 


தோழியின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் உண்மைதானா என பலருக்கும் தெரியவில்லை என்றாலும் கமெண்ட் மூலம் நடிகை அருந்ததி நாயர் விரைவில் குணமடைந்து நலமுடன் மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.