ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 



 


விறுவிறுப்பாக நடைபெற்ற AK62 பணிகள் :


துணிவு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அஜித் நடிக்க போகும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும் தற்காலிகமாக அதற்கு AK62 எனவும்  தலைப்பிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியது. மேலும் இப்படத்தில் நடிகர் சந்தானம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் அரவிந்த்சாமி வில்லன் என்றும் தகவல்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டன. இப்படி மளமளவென நடைபெற்ற AK62 பணிகள் கடந்த மாதம் இறுதியில் நிறுத்திவைக்கப்பட்டு பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. 


விக்னேஷ் சிவனை வெளியேற முக்கியமான காரணம் :


முதலில் விக்னேஷ் சிவன் AK62 திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ஒப்பந்தமானார். விக்னேஷ் சிவன் எடுத்து வந்த கதை லைகா நிறுவனத்திற்கும், நடிகர் அஜித்துக்கும் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் AK62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் அது உண்மையல்ல என்றும் விக்னேஷ் சிவன் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது என்ற தகவலும் தற்போது திரையுலகில் பரவி வருகிறது. 






நயன்தாராவால் விக்னேஷ் சிவனுக்கு வந்த சிக்கல் :


AK62 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை நயன்தாராவை முடிவு செய்து வைத்திருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஆனால் லைகா நிறுவனமோ திரிஷா, ஐஸ்வர்யா ராய், காஜல் அகர்வால் உள்ளிட்டோரை பரிந்துரைத்துள்ளது. இதற்கு ஒத்துவராத விக்னேஷ் சிவன் அவர்களை மறுத்துள்ளார். பின்னர் பாலிவுட் நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளத்தை பற்றி உறுதி செய்யும் தருவாயில் விக்னேஷ் சிவன் அவரையும் மறுத்துள்ளார். நயன்தாராவையே மீண்டும் மீண்டும் ஹீரோயினாக வலியுறுத்தி வந்ததால் விக்னேஷ் சிவன் மீது கடுப்பான லைகா நிறுவனம் மற்றும் அஜித்குமார், படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்க முடிவெடுத்தனர் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அதனால் தான் விக்னேஷ் சிவன் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கை மாற்றப்பட்டது என கூறப்படுகிறது.