வெற்றிமாறன் இயக்கத்தில் சென்ற மார்ச்.31 ஆம் தேதி வெளியான விடுதலை திரைப்படம்,  வெளியாகி 8 நாள்களில் இந்தியாவில் 22.65 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க திரையரங்குகளில் மார்ச்.31ஆம் தேதி விடுதலை பாகம் 1 வெளியானது.  பவானி ஸ்ரீ, சேத்தன், தமிழ், ராஜீவ்மேனன், கௌதம் மேனன் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை இந்தப் படத்தை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் இந்தியா முழுவதும் விடுதலை படம் 8 நாள்களில் 22.65 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் தகவல்களை வெளியிடும் Sacnilk தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விடுதலை படம் முதல் நாள் 3.85 கோடிகளையும்,  இரண்டாம் நாள் 3.8 கோடி ரூபாய் வசூலும், மூன்றாம் நாள் 5.05 கோடி ரூபாய் வசூலையும் நான்காம் நாள் 2 கோடிகளும், ஐந்தாம் நாள் 2.20 கோடி ரூபாயும், ஆறாம் நாள் 1.95 கோடிகளையும், ஏழாம் நாள் 1.75 கோடிகளையும், எட்டாம் நாளான நேற்று தோராயமாக 2 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


 






40 கோடி பட்ஜெட்டில் விடுதலை படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விடுதலை பார்த்து இயக்குநர் வெற்றிமாறன், சூரி ஆகியோரை ரஜினிகாந்த் நேரில் பாராட்டியதுடன், தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். 


“விடுதலை... இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  ரஜினிகாந்தின் இந்தப் பாராட்டு ட்வீட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


இதேபோல் விசிக தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் முன்னதாக விடுதலை படம் பார்த்து படக்குழுவினரையும் வெற்றிமாறனையும் வாழ்த்தியிருந்தனர். 


முன்னதாக விடுதலை படத்தின் தேங்கள் மீட் நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார். 


வெளியான நாள் முதல் விடுதலை படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், படத்தில் பணிபுரிந்த 25 பேருக்கு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு கிரவுண்ட் நிலம், படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பரிசாக தங்கக்க்காசுகள் முன்னதாக வழங்கப்பட்டன.


மேலும் படிக்க : April 14 New Release : இந்த தமிழ் புத்தாண்டில் வெளியாகும் புதிய தமிழ் படங்கள் என்னென்ன? ஆவலுடன் காத்திருக்கும் சினிமா பிரியர்கள்