நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் சூழலில், படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் குறித்து படத்தின் இயக்குனர் ஞானவேல் பேட்டி அளித்துள்ளார்.



பேட்டரி என்று பெயர் வைத்தது யார் தெரியுமா?


வேட்டையன் படத்தில் இடம்பெற்ற பேட்டரி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடித்திருப்பார். பேட்ரிக் என்ற துள்ளலான இந்த கதாபாத்திரத்தில் பகத் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.


இந்த கதாபாத்திரத்திற்கு பேட்டரி என்று பெயர் எப்படி வந்தது? என்று இயக்குனர் ஞானவேல் கூறியிருப்பார். பேட்ரிக் என்பது கூப்பிடும்போது பேட்டரி என்று பேச்சு வழக்கில் வரும் என்று நடிகர் மணிகண்டன்தான் கூறினார் என்று கூறியிருப்பார். ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  படத்தில் பேட்டரி என்ற கலகலப்பான கதாபாத்திரத்திற்கு பகத் தனது நடிப்பால் வலு சேர்த்திருப்பதுடன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.

அசத்திய பகத் ஃபாசில்:


விக்ரமில் அமர் என்ற ஆக்ரோஷமான அதிகாரியாக, மாமன்னனில் ரத்னவேல் என்ற அரசியல்வாதியாக நடித்து அசத்தியவர் இதில் பேட்டரி என்ற கலகலப்பான புத்திசாலியான திருடனாக நடித்து அசத்தியிருப்பார். வேட்டையன் படத்தில் படம் முழுக்க ரஜினியுடன் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் பகத் நடித்திருப்பார்.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் நடித்திருப்பார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ளார். வில்லனாக ராணா நடித்துள்ளார். இவர்களுடன் அபிராமி, ரோகிணி, தர்ஷன், கிஷோர், ரித்திகா சிங் என பலரும் நடித்துள்ளனர்.

சமூக கருத்து:


லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். போலி என்கவுன்டர், நுழைவுத்தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகள் என்று பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களை தோலுரிக்கும் விதமாக வேட்டையன் உருவாகி இருக்கும்.


ஜெய்பீம் படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கியுள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், நீதிபதியாகவும் மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரியாகவும் அமிதாப் பச்சன் நடித்திருப்பார்.