வாழை


மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் வாழை. பரவலான கவனத்தை ஈர்த்து வசூலிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது வாழை. திரையுலகைச் சேர்ந்த பலர் இப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப் பட்டு இயக்குநர் மாரியை புகழ்ந்து வருகிறார்கள். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் வாழை படத்தைப்ப் பார்த்து மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டினார். அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் வாழைப் படத்தை பார்த்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 


தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படி கூறியுள்ளார். "மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்” என்று கூறியுள்ளார்.