மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் மம்முக்கோயா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76.


பிரபல மலையாள நடிகர்


மலையாள சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் என பிரபல நடிகராக வலம் வருபவர் மம்முக்கோயா. டோவினோ தாமஸ் உடன் மின்னல் முரளி, மோகன் லால் உடன் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிங்கம், பிருத்விராஜ் உடன் குருதி உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தவர் மம்முக்கோயா. 


1979ஆம் ஆண்டு மேடைக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கிய மம்முக்கோயா, மலபார் வட்டார வழக்கில் பேசி நடிப்பதில் பிரபலமானவர். மேலும் தன் உடல்பாணியால் நகைச்சுவை செய்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த மம்மூக்கோயா, இதுவரை 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 


மாரடைப்பு


இவர் முன்னதாக கேரள மாநிலம், மல்லப்புர, வண்டூர் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டிக்கு தலைமை தாங்கச் சென்றிருந்த நிலையில், திடீரென பேச்சு மூச்சின்றி மயங்கி விழிந்தார். தொடர்ந்து மைதானத்திலேயே மம்முக்கோயாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து மம்மூக்கோயா கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் இன்று மம்முக்கோயா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மலையாளத் திரையுலகினரும் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதியாக மம்முக்கோயா நடிகர் விக்ரம் உடன் கோப்ரா படத்தில் தோன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.


நடிப்பு, இலக்கிய ஆர்வம்


கோழிக்கோடு, கல்லையில் பிறந்த மம்முக்கோயா, சிறுவயதிலிருந்தே நாடகத்துறையில் தீவிரமாக இயங்கி வந்துள்ளார். தொடர்ந்து 1979ஆம் ஆண்டு ’அன்யாருடே பூமி’ எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.


இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவரான மம்முக்கோயாவுக்கு, மலையாள இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர் முஹம்மது பஷீரின் சிபாரிசின் பேரில் ‘சுறுமையில்லாத கண்ணுக்கள்’ எனும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. 


எனினும் 1986ஆம் ஆண்டு மோகன்லால் உடன் இவர் இணைந்து நடித்த‘தூரே தூரே ஒரு கூடு கூட்டம்’  எனும் படம் இவருக்கு முக்கியத் திரைப்படமாக அமைந்து கவனமீர்த்தது. தொடர்ந்து 1987ஆம் ஆண்டு நாடோடிகட்டு எனும் திரைப்படத்தில் கஃபூர் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த நிலையில், இந்தக் கதாபாத்திரம் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. 


நடிப்பு, இலக்கியம் தாண்டி அரசியல், மதம் சார்ந்த கருத்துகளை உறுதியாக முன்வைத்து மம்முக்கோயா கவனமீர்த்து வந்துள்ளார். இந்நிலையில், முன்னதாக மலையாள நடிகை ரம்யா நம்பீசன், இயக்குநர் ஜான் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் மம்முக்கோயாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.