கோலிவுட் பொங்கல் போல் டோலிவுட்டில் சங்கராந்தி ஸ்பெஷலாக இன்று வீர சிம்ஹா ரெட்டி வெளியாகியுள்ளது.


ட்ரெய்னை பின்னோக்கி செல்ல வைப்பது முதல் சேவலை வைத்து எதிரிகளை பழிவாங்குவது வரை டோலிவுட்டின் மாஸ் மன்னனாக விளங்கும் பாலகிருஷ்ணாவின் திரைப்படங்கள் ஒருபுறம் ட்ரோல் கண்டெண்டாக மாறி வருகின்றன.


ஆனால் இவை எதுவும் தெலுங்கு தேசத்தில் பாலகிருஷ்ணாவுக்கு மார்க்கெட்டை எந்தவிதத்திலும் பாதித்ததில்லை. அதன்படி, சென்ற ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்த அகண்டா படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு சங்கராந்தி ஸ்பெஷலாக வீர சிம்ஹா ரெட்டி படம் இன்று வெளியானது.


இந்தப் பொங்கலுக்கு டோலிவுட்டில் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டியும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படமும் நேருக்கு நேர் மோதும் நிலையில், இன்று வீர சிம்ஹா ரெட்டி படம் முதலில் ரிலீசானது.


இந்நிலையில் உலகம் முழுவதும் ரிலீசான இந்தப் படத்தை பாலகிருஷ்ணா ரசிகர்கள் இன்று காலை முதல் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.


அந்த வகையில், அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த திரையரங்கு ஒன்றில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் திரையரங்கில் உற்சாக மிகுதியில் நம் ஊரில் நடந்து கொள்வது போல் திரையரங்கில் அதகளம் செய்ததால்  படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


படம் பார்த்துக் கொண்டிருக்கையில் பாலய்யாவுக்கு விசில் பறக்கவிட்டதுடன் காகிதங்களைக் கிழித்து பாலகிருஷ்ணா ரசிகர்கள் பறக்கவிட்ட நிலையில், கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளூர் காவல் துறையினரை வரவழைத்து எச்சரித்தனர்.


 






தொடர்ந்து படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதுடன் பாதிலேயே ரசிகர்கள் வெளியேறினர். இந்நிலையில், தங்கள் திரையரங்கில் இதுபோல இப்படி ஒரு சம்பவம் முன்னதாக நடந்ததில்லை என திரையரங்க உரிமையாளர் கோபமாக ரசிகர்களுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


சங்கராந்தி ஸ்பெஷல் வரிசையில் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் முன்னணி நடிகர் ரவி தேஜா இணைந்து நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் நாளை ஜனவரி 13ஆம் தேதியும், வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கான வாரசுடு படம் நாளை மறுநாள் ஜனவரி 14ஆம் தேதியும் ரிலீசாகிறது.


நேற்று துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான தெகிம்பு படம் ரிலீசாகி தெலுங்கு ஆடியன்ஸிடம் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.