விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ப்ரைம் டைம் சீரியல்களில் ஒன்றான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசனான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே நடக்கும் இந்த கதைக்களம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


அந்த வகையில் இரண்டாவது மகன் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வந்து நடிகர் வசந்த் வசி ஒரு சில காரணங்களால் சீரியலில் இருந்து திடீரென விலகினார். இது குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 



சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு முயற்சிகளை மேற்கொண்ட வசந்த் வசிக்கு வெள்ளித்திரையில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு சில வாய்ப்புகள் வந்த போது அவை கடைசி நேரத்தில் தட்டிப்பறிக்கப்பட்டன. அதில் ஒன்று தான் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் பாலாஜி மோகன் நடித்த கதாபாத்திரம். 


வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காத போதும் சீரியல் வாய்ப்பு வசந்த் வசிக்கு வரவே அதை ஏற்று நடித்துள்ளார். ஜீ தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பான சில சீரியல்களில் ஹீரோவாக லீட் ரோலில் நடித்திருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1ல் பிரஷாந்த் என்ற நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். ஒரு சில மாதங்கள் மட்டுமே அந்த கேரக்டரில் நடித்திருந்தாலும் அதன் ரீச் நன்றாக இருந்தது. 


தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2ல் இருந்து அவர் விலகியது குறித்து பேசுகையில் சேனலுடன் பிரச்சினை, மீனாவுக்கு எனக்கும் பிரச்சினை, டீமில் இருக்கும் யாருடனும் பேசுவதில்லை இப்படி பல வதந்திகள் பரவி வருகின்றன. அது எதுவுமே உண்மையில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவே. அதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது.


அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து முன்னேறி கொண்டே போவது தானே வாழ்க்கை. சீரியலில் லீட் ரோல் தான் என்றாலும் சினிமா வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்தி கொள்ள தானே வேண்டும். சினிமாவில் ஜெயிப்பேனா என தெரியவில்லை. இருந்தாலும் நான் என்னுடைய முயற்சியை செய்கிறேன். 


தற்போது செந்தில் கதாபாத்திரத்தில் வெங்கட் ரெங்கநாதன் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே மீனாவின் புருஷனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1ல் நடித்ததால் மக்கள் அவரை விரைவில் ஏற்றுக்கொள்வார்கள் என பேசி இருந்தார்.