பார்ப்பது... நடப்பது... அழுவது... என ஒவ்வொரு அசைவிலும் நம்மை சிரிக்க வைத்த மகா கலைஞன் ‛வைகைப் புயல்’ வடிவேலு. வசனம் பேசாமல் சிரிக்க வைத்த இந்தியாவின் சார்லி சாப்ளின். நடித்த வரை எல்லா படங்களும் ஹிட். ஒருவேளை படம் பிளாப் ஆனாலும் வடிவேலு காமெடி மட்டுமாவது கட்டாயம் ஹிட். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை புயல், திடீரென பழைய படங்களில் காற்று, கடல், பறவை எல்லாம் பிரீஸ் ஆவது போல், நடிப்பதில் பிரீஸ் ஆனது. அந்த ப்ரீஸ் இப்போது ரிலீஸ் ஆகப்போகிறது.  கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பின் முழுநேர சினிமாவில் களமிறங்க போகிறார் வடிவேலு. அதற்கான பேச்சு வார்த்தை தீவிரமாக துவங்கியிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதை விட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்கப்பபோகிறது. வடிவேலு என்கிற மகா கலைஞன், எங்கே சறுக்கினார்... எப்படி எழப் போகிறார் என்பதை பார்க்கலாம். 




பத்தோடு பதினொன்னு... அத்தோடு இது ஒன்னு!


1990ல் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு கதாபாத்திரம், உடல் பாத்திரமும் அப்படி தான். அதன் பின் அவர் இருக்கும் இடம் தெரியாத பாத்திரமே இல்லை என்கிற நிலை மாறியது வேறு கதை. இப்போது 1991 க்கு போவோம். என் ராசாவின் மனசிலே... கதாபாத்திரத்தின் பெயரும் வடிவேலு தான். கறுத்த உடல், உடைந்த உடலில் தோன்றிய வடிவேலு, ‛போடா போடா புண்ணாக்கு... போடாத தப்பு கணக்கு’ என , அப்போதே தன்னை பற்றிய விமர்சனத்திற்கு பாடலில் பதிலளித்திருந்தார். முதல் படமே நல்ல பேர் தர, அடுத்தடுத்து படங்களில் வடிவேலு புக் செய்யப்படுகிறார். ஆனால், எல்லாமே பத்தோடு பதினொன்னு... அத்தோடு இது ஒன்னு என்கிற மாதிரியான வேடங்கள். கூட்டமா கும்பலா வரக்கூடிய காமெடி டிராக்கில் ஒருவராய் பயணிப்பார். ஆனாலும் அதிலும் தனித்து தெரிவார். காரணம் அவரது தோற்றம். சின்ன கவுண்டர், இளவரசன், சிங்கார வேலன், தெய்வ வாக்கு, தேவர் மகன் என கிட்டத்தட்ட 15 படங்களை கடந்த பிறகு தான், சோலா வாய்ப்பே அவருக்கு கிடைத்தது. கவுண்டமணி-செந்தில் கோலோச்சிய கால கட்டம் அது. அந்த வாய்ப்பே அரிதில் பெரிது தான். 1993ல் கிழக்குச் சீமையிலே தான் வடிவேலு, தனியாளாக காமெடியை சுமந்த படம். அதுக்கு அப்புறம், எல்லாம் வடிவேலு மயமானது. 




எல்லாம் வடிவேலு மயம்!


வடிவேலு அடி வாங்கினால் சிரித்தார்கள், வடிவேலு மிதி வாங்கினால் சிரித்தார்கள், வடிவேலு அழுதால் கூட எல்லோரும் சிரித்தார்கள். சிரிப்பு மாத்திரையாகவே மாறினார் வடிவேலு. 1994ல் வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் ஹீரோ கிடையாது; ஹீரோக்கள் படம். அதில் ஒரு ஹீரோ வடிவேலு. அதுவரை அடிவாங்கி சிரிக்க வைத்த வடிவேலு, அடித்து சிரிக்க வைக்கத் துவங்கினார். இடை இடையே அடியும் வாங்கினார். 90 களில் ஆண்டுக்கு 20 படங்கள் வரை பண்ணும் அளவிற்கு பிஸி மட்டுமே வாழ்க்கையாய் இருந்தது. அதற்கு பின் வடிவேலு கால்ஷிட் வாங்கிய பிறகு தான், படங்கள் பூஜைக்கு போயின. ஹீரோக்களை புக் செய்வதற்கு முன் வடிவேலுவை புக் செய்தார்கள். வடிவேலுக்காக திரைக்கதையில் மெனக்கெட்டார்கள். காமெடி டிராக்கில் ஹை ஸ்பீடு புல்லட் ரயிலாக பறந்தது ‛வைகைப் புயல்’. தனித்துவமான குரல்களில் பாடல்களும் பாடியிருந்தார். பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்கள் இணைவது போல, வடிவேலு குழுவில் பல நகைச்சுவை நடிகர்கள் இணைந்தார்கள். வடிவேலு ‛டீம்’ உருவானது. படத்தில் வடிவேலுக்கு ஒரு பாட்டு, ஒரு டான்ஸ் என்றெல்லாம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, புகழின் உச்சத்திற்கு சென்று, அதையும் தாண்டி இன்னும் உயரத்தில் பறந்தார் வடிவேலு... இல்லை இல்லை மிதந்தார். 




ஹீரோ ஆசை!


ஹீரோக்களுக்கு நடித்துக் கொடுப்பதற்கு பதில் நாமே ஹீரோ ஆன என்ன... என  தோன்றிய எண்ணம் தான், 2006ல் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் ‛இம்சை அரசன் 23ம் புலிக்கேசி’யில் டபுள் ஆக்ஷன் ஹீரோ ஆனார். படம் தாறுமாறு ஹிட். ஆனால், அந்த முடிவு தான் நாளடைவில் அவரை ஒட்டுமொத்த சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்க காரணமாகப் போகிறது என்பதை அப்போது  வடிவேலு அறிந்திருக்கவில்லை. அதன் பிறகு காமெடியனாக நடித்தாலும், நீங்க ஹீரோ என யாரோ அவரின் உள் மனதில் ஆணி அடித்திருக்க கூடும். அவ்வப்போது ஹீரோவாகவும் நடிக்கத் துவங்கினார். 




முதலும் முடிவும்...


புகழ் உச்சிக்கு செல்லும் போது, இலக்கு எல்லாம் நிறைவேறிய பிறகு அடுத்தகட்டம் என்ன என்கிற எண்ணம் பொதுவாக நடிகர்களுக்கு வரும். அப்படி தான் வடிவேலுவுக்கு ஒரு எண்ணம் வந்தது. 2011 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. திமுகவிற்கு ஆதரவாக முன்னணி நட்சத்திர பேச்சாளராக களமிறக்கப்பட்டார் வடிவேலு. அதிமுக கூட்டணியின் பிரதான கட்சியான தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார் வடிவேலு. அது அதிமுகவையும் பாதித்தது. திமுகவின் முக்கிய அசைன்மெண்ட் அதுவாக தான் இருந்தது.  வடிவேலுவின் பிரசாரம், ஜெயலலிதாவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்க கூடும். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. திமுக எதிர்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத அளவிற்கு தோல்வியை தழுவியது. இப்போது, அனைவர் பார்வையும் வடிவேலு பக்கமே இருந்தது. அடுத்த 20 மாதங்கள் சினிமா, நிகழ்ச்சிகள் என அனைத்திலிருந்தும் ஒதுங்கினார் வடிவேலு. 2012ல் மறுபடியும் ஒரு காதல், 2014ல் தெனாலி ராமன், எலி, 2017 ல் மெர்சல் இதுதான். கடந்த 9 ஆண்டுகளில் வடிவேலு நடித்த படங்கள். ஆண்டுக்கு 20 படங்களில் நடித்தவர், அதன் பின் முடங்க அரசியல் மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இருந்தது. முதல் அரசியல் பிரவேசமே முடிவாய் போனது. 




இம்சையில் முடிந்த இம்சை அரசன்!


முன்பு கூறியதை இப்போது நினைவு படுத்துகிறேன். 23ம் புலிகேசி நடித்த போது, அது பாதிக்கும் என வடிவேலுக்கு தெரியாது என கூறினோம் அல்லவா. அது தான் , வடிவேலு முடங்க காரணமானது. 2017 ல் அரசியல் மற்றும் இன்னும்  பிற பிரச்னைகளையெல்லாம் தீர்த்து மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு. அப்போது தான் மெர்சல் கமிட் ஆனது. இந்த முறை ஓப்பனிங் வேறு ரகமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார் வடிவேலு. அதற்காக அவர் தேர்வு செய்தது இம்சை அரசன் 24ம் புலிகேசி. 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகம். அதே சங்கர், சிம்பு தேவன் கூட்டணி. கதைகளில் திருத்தம், ஆடை தேர்வில் தலையீடு என வடிவேலு மீது புகார்கள் குவிந்தன. இதனால் தயாரிப்பாளர் சங்கருக்கு நஷ்டம். முறையிட்ட போது முரண்பிடித்தார் என்பது வடிவேலு மீதான குற்றச்சாட்டு. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் கதவை தட்டினார் சங்கர். அவ்வளவு தான், வடிவேலுக்கு ‛ரெட் கார்டு’ வழங்கப்பட்டது. 9 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன் பின் வடிவேலுவை புக் செய்ய எந்த தயாரிப்பாளரும முன் வரவில்லை. முன்னதாக வடிவேலு இல்லாத ‛கேப்’பை, சந்தானம், சூரி என பட்ஜெட் காமெடியன்கள் பலரும் ஆக்கிரமித்திருந்தனர். தயாரிப்பாளர்களுக்கு அது பட்ஜெட் ரீதியாகவும் உதவியது. இதனால் வடிவேலுவை கட்டாயத்தின் பேரிலேயே தவிர்க்க துவங்கினர். ஆனாலும், சின்னத்திரைகள் மூலம் வடிவேலு சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார். மீம்ஸ்களில் வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த இடத்தை யாருமே பூர்த்தி செய்ய முடியவில்லை. அதன் பின் வந்தவர்கள் எல்லாம் அவர்களுக்கான தனிப்பாதையை அமைத்தார்களே தவிர, வடிவேலு பாதைக்கு வரவில்லை, வர முடியவில்லை. 




வடிவேலு ரிட்டன்ஸ்....


இப்போது மீண்டும் இம்மை அரசன் 24ம் புலிகேசி படத்தை கொண்டு வரவும், வடிவேலு மீதான ரெட்கார்டை நீக்கவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முன் வந்தார். இரு தரப்பு பேச்சு வார்த்தையும் சுமூகமாக போவதாக கூறப்படுகிறது. ரெட் கார்டில் இருந்து ரிலீஸ் ஆகிறார் வடிவேலு. இம்சை அரசன் பார்ட் 2 வருவது நேற்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இதனால் 7 ஆண்டுகளுக்கு பின் முழு நேர காமெடியனாக மீண்டும் ரிட்டன் ஆகிறார் வடிவேலு. பழையை பார்மில் இருந்து பார்த்தால், 2011க்கு பின் 10 ஆண்டுகள் கழித்து வருகிறார் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். நீண்ட தயாரிப்பில் இருந்த படம் இம்சை அரசன் 24ம் புலிகேசி. இப்போது படப்பிடிப்பை துவக்கினால் கூட , இந்த ஆண்டே ரீலீஸ் செய்து விடலாம். ஓடிடியில் ரிலீஸ் செய்தால் கூட வடிவேலு படத்திற்கு மார்க்கெட் அள்ளும். எந்த ஒரு நடிகருக்கும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்த கிரேஸ் இருந்ததில்லை. பீல்ட் அவுட் ஆகி ஒதுங்கிவிடுவார்கள்.ஆனால் இன்றும் திரையில் வடிவேலு பெயர் போட்டாலே கிளாப்ஸ் அள்ளும் என்றால், அது தான் வைகை புயல் வடிவேலு! 


Sivashankar Baba: ‛கலர் கலர் சட்டை... கூலிங் கிளாஸ்... மாடர்ன் அவதாரம் மாட்டிய கதை!