கண்டிப்பா நான் பாடணும்னு சந்தோஷ் நாராயணன் சொன்னார் - வடிவேலு

நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்படுவதாக கூறப்படும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.

Continues below advertisement

கடந்த 2005-ஆம் வருடம் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வந்தது. ஆனால், நடிகர் வடிவேலுவிற்கும் தயாரிப்பு தரப்பிற்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படம் நிறுத்தப்பட்டதுடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் புகார் கொடுத்தார்.

Continues below advertisement

இதனை தொடர்ந்து, நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிகர் வடிவேலு நடிக்காமல் இருந்தார். இடையில், அவர் புதிய இணையத்தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் அப்போது வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் மாத இறுதியில் (27.08.21) தயாரிப்பாள்ர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீதான புகாரில் சுமூக பேச்சுவார்த்தை எட்டப்பட்டுவிட்டதாகவும், அவர் படங்களில் நடிக்க தடை ஏதும் இல்லை எனவும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனையடுத்து, நடிகர் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்று ட்ரெண்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வடிவேலு மீண்டும் வந்ததில் மீம் க்ரியேட்டர்களுக்கு மட்டுமில்லாமல், மீம்களை கண்டு சிரிக்கும் சாதாரண மனிதர்களுக்கும் அளவில்லா மகிழ்வை கொடுத்துள்ளது. அன்றாட வாழ்வில் இன்றியமையாத வடிவேலு ஒன் லைனர்களும் முகம் புன்னகை பூத்து காத்திருக்கின்றன.

 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திற்கும் தனக்கும் இனி சம்பந்தமில்லை எனவும் அந்த படத்தில் இருந்துதான் விலகிவிட்டதாக தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சுராஜ் இயக்கும் நாய் சேகர் என தலைப்பிட்டு இருக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படக்குழுவினரோடு நேற்று தமது 61-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வடிவேலு பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிகழ்வில் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு வடிவேலுவை வாழ்த்தினர். இந்த பிறந்த நாள் பார்ட்டியில் பேசியுள்ள வடிவேலு, இந்த பிறந்த நாள் புதிதாக பிறந்தது போல் இருப்பதாகவும், மக்களின் கஷ்டங்களை ஒப்பிடும்போது தன் கஷ்டம் மிகவும் சாதாரணம் என்றும், இன்னும் வித்தியாசமான கெட்டப்களை போட்டு மக்களை மகிழ்விக்க வேண்டும் என்றும், இன்னும் சூனா பானா கேரக்டர் போன்ற எனர்ஜி இருப்பதாகவும், கலைத்தாயும் தானும் பிரிந்து மீண்டும் சேர்ந்துள்ளதாகவும் நெகிழ்ந்துள்ளார். தவிர, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளம் எதிலும் தான் இல்லையென்றும், அப்படி போலியாக இருக்கும் எதையும் நம்பவேண்டாம் என்றும் வடிவேலு கூறியுள்ளார்.

"எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் ஆசிர்வாதம், வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்துள்ளது. திரையுலகத்தில் இருந்தும் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த அளவுக்கு இந்த பிரச்சினையை முடித்து வைத்தது லைக்காவின் சி.இ.ஓ தமிழ் குமரன்தான். சுபாஷ்கரன் சார், நான் மற்றும் தமிழ் குமரன் சேர்ந்து பிரச்னையை தீர்த்து, இயக்குனர் சுராஜிடம் புதிய படம் குறித்து பேசினோம். இப்போதைக்கு லைகாவின் தயாரிப்பில், நாய் சேகர் உள்ளிட்ட 2 படத்தில் மட்டும்தான் ஹீரோவாக நடிக்கிறேன், அதன் பிறகு காமெடியானகவே தொடர்வேன், குறிப்பாக ஹிஸ்டாரிக்கல் படங்களில் ஹீரோவாக நடிக்கவே போவதில்லை, அது கலைத்தாயின் மீது ஆணை" என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் என பெயரிடப்படவுள்ள படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் இயக்குநர் சுராஜ் மற்றும் வடிவேலு தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு ஒரு பாடல் பாடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

"ஏற்கனவே பல படங்களில் பாடி இருக்கிறேன். அதேபோல் இந்த படத்திலும் ஒரு பாடல் பாடுகிறேன். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வேண்டும் என்று முதலிலேயே ஆசை இருந்தது. இது தொடர்பாக தமிழ் குமரனிடமும், இயக்குநரிடமும் பேசினேன். சந்தோஷ் நாராயணன் தற்போது முன்னணி மியூசிக் டைரக்டர். அவர் நமது படத்தில் வேலை பார்ப்பாரா? என்ற சந்தேகம் நிறைய இருந்தது. நான் கூறியவுடன் இயக்குநரும், தமிழ் குமரனும் சேர்ந்து சந்தோஷ் நாராயணனிடம் போனில் பேசினார்கள். அப்போது சந்தோஷ் நாராயணண் கூறிய முதல் வார்த்தை '' தலைவன் வடிவேலு எங்கே... அவர் படத்துக்கு மியூசிக் போடாம இருப்பேனா. அவரிடம் போனை கொடுங்கள்'' என்பதுதான்.

என்னிடம் ஃபோனில் பேசிய சந்தோஷ் நாராயணண், ''நான் உங்கள் தீவிர ரசிகன்'' என்று கூறினார். ஒரு பிஸியான மியூசிக் டைரக்டர் கேட்ட உடனேயே எனது படத்தில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இந்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக ஒரு பாடல் பாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்." இவ்வாறு நடிகர் வடிவேலு கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola