வைகை புயல் வடிவேலு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. கடந்த 9ம் தேதி வெளியான இப்படத்தில் நடிகர் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. 


 



தோல்வியில் துவண்ட நாய்சேகர் :


ஏராளமான திரைப்படங்களின் தனது தனித்துமான நகைச்சுவையால் அனைவரின் மனதையும் கவர்ந்தார். நகைச்சுவையில் கலக்கிய வடிவேலு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் நடித்த திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படம் நல்ல வசூலை பெற்றாலும் அதனை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற தவறியதால் தோல்வியை தழுவியது. பிறகு சில காரணங்களால் திரைவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு மீண்டும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.  


இப்படத்தின் நடிகர் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சிங்கர் சிவாங்கி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக  வெளியானது. தங்கள் அபிமான நகைச்சுவை நடிகர் இந்த திரைப்படம் ரீ என்ட்ரி கொடுப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்கத்தில் சென்று பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. நெகடிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸிலும் படு தோல்வியை இப்படம் சந்தித்தது. 


 






 


மனம் மாறிய வடிவேலு :


பிளாப் படமாக அமைந்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் வடிவேலு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது இனிமேல் பழைய ரூட்டிற்கே ஜூட் விட்டு ஹீரோவாக நடிக்காமல் நகைச்சுவை பாணியை மீண்டும் கையில் எடுக்க முடிவு எடுத்துவிட்டாராம். இரு தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று தரிசித்த வைகை புயல் செய்தியாளர்களை சந்தித்த போது இனிமேல் நகைச்சுவை ரோல்களில் நடிப்பதை தொடர்வேன். ஹீரோவாக நடிக்க  போவதில்லை என்பதை தெரிவித்துள்ளார்.


 






 


அது மட்டுமின்றி தனது பழைய சக நடிகர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள போவதாகவும் தெரிகிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்  மாமன்னன் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இனி நடிக்கப்போவதும் நகைச்சுவை  ட்ராக் தான் என்பது தற்போதைய கோலிவுட்டின் பரபரப்பு செய்தியாகும்.