தமிழ் சினிமாவில் தவிர்க முடியாத இசையமைப்பளர்களுள் ஒருவராக இருப்பவர் அனிருத். சினிமா துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான குறுகிய காலக்கட்டத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.  ரஜினி, அஜித், விஜய் என  பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். திரைப்பாடல்கள் மட்டுமல்லாது அவ்வபோது இளைஞர்களை கவரும் விதமாக பல ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்  சென்னை குறித்து வெளியான , “சான்ஸே இல்லை , இல்லை சான்ஸே இல்லை”, “ஐயம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டார்” உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சென்னை தினம் என்றாலே அனிருத் பாடல்கள் இல்லாத கொண்டாட்டங்களை எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் தற்போது தேன்குரல் அறிவுடன் இணைந்து புதிய ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார் அனிருத்.முன்னதாக இந்த கூட்டணியில்  மாஸ்டர் படத்தில்  ‘வாத்தி ரெய்ட் ‘ என்ற பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.







இந்நிலையில் அடுத்த ஆல்பம் பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஊசிங்கோ’ என்ற தலைப்பில் அனிருத் மற்றும் அறிவு காம்போவில் இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.  பாடலின் தலைப்பை வைத்து பார்க்கும் பொழுது சமூக அக்கறையுடன் இதனை உருவாக்கியுள்ளார்களா அல்லது டாக்டர் படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலா  என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த பாடலை ‘கோப்ரா’ படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.  கோரியோகிராஃபி இயக்குநராக சதீஷ் கிருஷ்ணனும், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சனும் களம் கண்டுள்ளனர்.இதனை divo music india  தயாரித்துள்ளது. விரைவில் divo music india  பக்கத்தில் இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.





 தெருக்குரல் அறிவு மற்றும் தீ காம்போவில் வெளியான ‘என்ஜாயி என் சாமி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பல சாதனைகளையும் படைத்தது. பூர்வகுடி மக்களின் வாழ்வியலை ராப் இசையுடன் வெஸ்டன் ரசிகர்களுக்கும் புரியும்படியான கலவைகளுடன் படைத்திருந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தற்போது 200 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது  ‘என்ஜாயி என் சாமி’  பாடல். சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்று  ‘என்ஜாயி என் சாமி’  பாடலை அங்கீகரிக்கும் விதமாக தங்களின் அட்டைப்படத்தில் தீ-யின் புகைப்படத்தை இடம்பெற செய்தது. ஆனால் அதில் அறிவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் சந்தோஷ் நாராயணன் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இந்த பிரச்சனைக்கு பிறகு பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் விரிசல் விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.