Kalaignar 100: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ’கலைஞர் 100’ விழாவில் அமிதாப் பச்சன், மோகன்லால் சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கலைஞர் 100 விழா:


மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும், திமுக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டு கருணாநிதிக்கு கலைஞர் 100 விழா பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த ஸ்டார் நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். 

 

அமிதாப், ரஜினிகாந்த், கமல்:


 

அந்த வகையில், கலைஞர் 100 விழாவில் நடிகர்கள் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சிவராஜ் குமார், கன்னட நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. முன்னதாக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்க ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவருக்கு கலைஞர் 100 விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர். 

 

இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இருவரும் விழாவில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர். தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக நடைபெறும் கலைஞர் 100 விழா வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 

 

தமிழ் சினிமாவில் புராணங்களையும், இலக்கியங்களையும் மட்டுமே படமாக எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், சினிமாவில் சமூக மாற்றத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. சிறுவயதில் இருந்தே தமிழ் மொழியில் அதிகம் ஈர்ப்பு கொண்ட கருணாநிதி, நாவல்கள், இலக்கியங்கள், கவிதைகளை எழுதியதுடன், திரைக்கதை, வசனம் எழுதி சினிமாவில் புரட்சி செய்தார். கருணாநிதி சினிமாவில் திரைக்கதை எழுதிய படம் ராஜகுமாரி, எம்ஜிஆர் நடிப்பில் 1947 ஆம் ஆண்டு வெளியான இப்படம் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

 

அதன்பின்னர், சமூக பிரச்சனைகளை பேசியும், மூட நம்பிக்கைக்கு சாட்டியடியாய் அமைந்தது தான் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான பராசக்தி படம். இப்படி, தீண்டாமை, சுயமரியாதை சிந்தனைகளை திரையில் காட்டி மக்கள் மனதில் விதை போட்ட கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் கலைஞர் 100 விழா எடுத்து சிறப்பிக்க உள்ளது. 

 

 

 

 

மேலும் படிக்க: