2020ம் ஆண்டு முதல் குடும்ப நலத்துறையில் மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய  மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை, துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் தாய் - சேய் நல மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு:


இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது குறித்தான விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் குடும்ப நலத்துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.


இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய ககன் தீப் சிங், “ இந்தியாவில் 30, 40 வருடங்களுக்கு முன்பு தாய்க்கு குழந்தை பிறக்கும்  விகிதம் 3 குழந்தையில் இருந்து 4 குழந்தையாக இருக்கும். படிப்படியாக தற்போது குறைந்துள்ளது. இது நல்ல விஷியம். குடும்ப நலத்துறை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பாக உள்ளது. இன்னும் நிறைய பேர் 2 குழந்தை பிறந்த பிறகும் குடும்பக் கட்டுப்படு செய்வதில்லை.


குடும்பக் கட்டுப்பாடு தாயின் உடல்நிலை பொறுத்து இருக்க வேண்டும். இதை மற்ற குடும்பத்திருக்கும் எடுத்துரைக்க வேண்டும். ஆப்ரேஷன் இன்றி நவீன முறையில் ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். அனைத்து அதிகாரி, அலுவலர்களுக்கும் ஒரு வேண்டுகோள், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக முக்கியத்துவத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்” என பேசியுள்ளார்.  


மக்கள் தொகை:


தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ” 30 கோடி முகம் உடையாள் என பாரதியார் மக்கள் தொகை குறித்து அப்போதே பாடி உள்ளார். இப்போது இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடியை தாண்டி உள்ளது. மக்கள் தொகைக்கு இரு தரப்பு வாதங்கள் இருக்கிறது. எது எப்படியாக இருந்தாலும் சரியான அளவில் மக்கள் தொகை இருக்கும் நாடே சுபிட்சமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் நோக்கி செல்லும்  நிலையில் இந்த துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரி, அலுவலர்கள் பாராட்டுவது மிக முக்கியம். 15 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் ஆட்சியில் இந்த விருதுகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


குடும்ப நல திட்டங்களின் விளைவாக 2006ம் ஆண்டு நிலைப்படி மொத்த கருவளவு மாற்ற விகிதம் (total fertility rate replacement level) 2.1 ஆக உள்ளது. 2.1 என்பது தற்போது 1.4 ஆக குறைந்துள்ளது.  குடும்ப நல திட்டத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது 36 மாநிலங்களில் தமிழ்நாடு தான் அந்த இலக்கை அடைந்துள்ளது.


கருவளவு மாற்ற விகிதம்:


தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு 2031 - 36 ஆம் ஆண்டுகளில் கட்டுக்குள் வரும் என இந்திய புள்ளியல் தெரிவித்துள்ளது. ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளில் total fertility rate replacement level 2.1யை விட குறைவாகவே உள்ளது.


மொத்த கருவளவு மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால் தான் தமிழ்நாடு இந்தியாவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ளது.


1971களில் 31.4 ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 13.8 ஆக குறைந்துள்ளது. 1971 களில் 14.4 ஆக இருந்த இறப்பு விகிதம் 6.1 ஆக குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் மட்டும் அல்ல.மருத்தவ துறையின் வளர்ச்சியால் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.


2000 -ஆம் ஆண்டு ஒரு லட்சமாக இருந்த மகப்பேறு மரணம் 54 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மகப்பேறு மரணம் கடந்த 20 ஆண்டுகளில் 4 ல் ஒரு பங்காக குறைக்கப்பட்டு உள்ளது. 1971ல் 1000 குழந்தைகளில் 113  குழந்தைகளுக்கு சிசு மரணம் இருந்த நிலையில் தற்போது அது 13 என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.


நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை:


1985 களில் 37.8% ஆக இருந்த உயர் வரிசை பிறப்பு 2022 ல் 6.7% ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சிறப்பாக செயலாற்றிய 12 ஆட்சித் தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற முதல்வர் அறிவுறுத்தி உள்ளதால் அவர்கள் இங்கு வரவில்லை. அவர்களுக்கு தனி விழா வைத்து விருதுகள் வழங்கப்படும்.


திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிரந்தரமாக  குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களின் எண்ணிக்கை 6,42,048. நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆண்களின் எண்ணிக்கை 2,535, தற்காலிக குடும்ப நல சாதனம் ஏற்ற பெண்கள் 10,99,940 பேர், தற்காலிக கருத்தடை ஊசி போட்டுக்கொண்டவர்கள் 1,67,216 பேர். குடும்ப நலத்துறை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறது”  என தெரிவித்துள்ளார்.