பிரபல பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவித் பிரபலமான சினிமா கேரக்டர் ஒன்றை மறு உருவாக்கம் செய்ய முயன்று சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. 


இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை உர்ஃபி ஜாவித். இவர் இந்தி பிக்பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதேசமயம் உர்ஃபி ஜாவத் வித்தியாசமான உடை அணிவதற்கு பிரபலமானவர். எவ்வளவு வித்தியாசமாக அவர் ஆடையை அணிய முடியுமோ, அதே அளவுக்கு உர்ஃபியால் கவர்ச்சி காட்டவும் முடியும். இதனாலேயே அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


அதேசமயம் துணியை கிழித்து அணிகிறார் என ஒவ்வொரு முறையும் புகைப்படத்தை பதிவிடும் இணையவாசிகள் கிண்டல் செய்வது வழக்கம். சில மாதங்களுக்கு முன் பெயர் குறிப்பிட முடியாத ஒருவர் என்னை பட வாய்ப்புக்காக தனிமையில் இருக்க அழைத்தார் என கூறி அதிர வைத்தார். இப்படி இருக்கும் நிலையில் இம்முறை அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருப்பது உர்ஃபி ஜாவத்திற்கே அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் உள்ளது. 


அதில் 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான பூல் பூலையா படத்தில் இடம் பெற்ற ராஜ்பால் யாதவின் காமெடி கேரக்டரான ’சோட் பண்டிட்’டை அவர் மறு உருவாக்கம் செய்ய முயன்றார். இந்த படம் மலையாளத்தில் மணிசித்ரத்தாழ் ஆகவும், தமிழில் சந்திரமுகியாகவும் உருவானதின் ரீமேக் ஆகும். சோட் பண்டிட் கேரக்டரை மீண்டும் உருவாகும் வகையில் காவி நிறத்தில் ஆடையணிந்த உர்ஃபி ஜாவத், தலையில் ஊதுபத்தியை எரிய வைத்து கொண்டு தலைமுடிக்குள் சொருகி கொண்டார். மேலும் முகத்தில் சிவப்பு நிறத்தில் மேக்கப் போட்டிக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 






இந்த படங்கள் இணையத்தில் ட்ரெண்டான நிலையில், உர்ஃபி ஜாவத்திற்கு கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. அவருக்கு கொலை மிரட்டல்கள் ஒன்றும் புதிதல்ல என்றாலும், கவர்ச்சியான ஆடைகளை அணியும் போது இதுபோன்ற மிரட்டல்களும் விமர்சனங்கள் வரும். ஆனால் இம்முறை தனக்கு விடப்பட்ட மிரட்டல்களை கண்டு உர்ஃபி ஜாவத் கடுப்பாகியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ‘காரணமே இல்லாமல் மிரட்டல்கள் வருகிறது. நான் சோட் பண்டிட் ஆடையை அணிந்த பிறகு தான் இதுபோன்ற கருத்துகள் எழுந்துள்ளது. எந்த நிறமும் எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல , அகர்பத்தி எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல , எந்த பூவும் எந்த மதத்திற்கும் சொந்தமானது  அல்ல” என காட்டமாக அவர் பதிவிட்டுள்ளார்.