தமிழ் சினிமாவில் என்றென்றும் மார்கண்டேயனாக இருக்கும் நடிகர் சிவகுமார் இன்று தனது 82ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  


பன்முகக் கலைஞர் :


தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளைகள் கடந்து ரசிகர்களை ஈர்த்து முக்கியமான நடிகராகக் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிவகுமார். சிறு சிறு துணை கதாபாத்திரங்களில் முகம் காட்டிய நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த ஓவியர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், சமூக ஆர்வலர் என பன்முகக் கலைஞராக விளங்குபவர். சினிமா துறையில் அடியெடுத்து வைத்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே அவர் கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட்டார். தெய்வீக திரைப்படங்களில் பெரும்பாலும் அழகு முருகனாக நடித்த பெருமை நடிகர் சிவகுமாரையே சேரும். 


 



நெறி தவறாதவர் :


வயது அதிகரிக்க ஞாபக மறதியும் உடல் சற்று தளர்ச்சி அடையவும் செய்யும். ஆனால் தனது 80வது வயதில் கூட யோகா கலை, மூச்சுப் பயிற்சி என உடலையும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக பேணிக்காத்து வருகிறார். 


வாழ்நாள் சாதனையாளர் :


எத்தனை பெரிய வசனம் என்றாலும் சிறிதும் பிசிறு தட்டாமல் அசால்ட்டாக பேசக்கூடிய திறமை படைத்தவர் நடிகர் சிவகுமார். 170க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர். உணர்ச்சி ததும்ப தனது கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டக் கூடியவர். அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஏராளமான ஃபிலிம் பேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவை கொடுத்து கௌரவிக்கப்பட்டார். 


இந்தத் தமிழ் திரையுலகத்தில் தன்னிகரில்லா கலைஞனாக விளங்கும் சிவகுமார் பிறந்தநாளுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் எக்ஸ் தளம் மூலம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


"அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!" என தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை அழகான ஒரு குறிப்புடன் பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன். 


 



இவர்கள் இருவரும் இணைந்து சொல்லத்தான் நினைக்கிறேன், பணத்துக்காக, அக்னி சாட்சி, அரங்கேற்றம், மேல்நாட்டு மருமகள், குமாஸ்தாவின் மகள், பட்டிக்காட்டு ராஜா, தேன்சிந்துதே வானம் என ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர். இன்றும் அதே நட்புடன் பரஸ்பர அன்புடன் இருந்து வருகிறார்கள் என்பதற்கு கமல்ஹாசன் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படமே சான்றாகும்.