”நான் என்னமோ தமிழ் சினிமாவ தாங்குற மாதிரி.. சினிமாவ விட்டு போகாதீங்கன்னு சொல்றாங்க..நான் நடிக்கவேயில்லை,” - சினிமா நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருப்பார்.


மாமன்னன் திரைப்படம் எனது கடைசி படம் என்று அவர் சொன்னது அனைவரும் அறிந்ததுதான். தமிழ்நாட்டின் வரலாற்று பக்கங்களில் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் கட்சியின் முன்னணி முகம்; தயாரிப்பாளர்; நடிகர்; பல் ஸ்டார்கள் இருந்த காலத்தில் சினிமாவிற்குள் வந்தாலும், போட்டிகளுக்கு இடையே பயணித்தவர். உதயநிதியின் ஸ்கீன் ப்ரசன்ஸ் பிடிக்காதவர் இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். புகழ்மிக்க அடையாளங்கள் நிறைய இருந்தாலும் ‘ உதயண்ணா’ என்பது உருவானதில் உதயநிதி ஸ்டாலின் பங்கு அதிகம். மனிதன் திரைப்படத்தில் “எப்டிடா உன்னை லவ் பண்ணேன்னு?’-ன்னு பிரியா கொஞ்சலோடு கேட்பதுபோல ‘ஏன் உதயநிதிய ஒரு நடிகரா பிடிக்கும்னு.’ கேட்டா, நிச்சயம் பெரும்பாலானோரின் பதில் இப்படியிருக்கும் - ’ திரையில் அவர பார்க்கிறப்ப நம்மில் ஒருவர் போலவே இருக்கும்; அதாவது ‘The Boy Next Door'. நடிகர் என்கிற மாஸ்லாம் பெரிதாக திரையில் இருக்காது. அப்படி, மாஸ் சீனெல்லாம் இருந்தாலும் அது உதயநிதிக்கு எவ்வளவு பொருந்தும்னு சொல்லிடமுடியாது. ஆனால், கதாபாத்திரத்தை பார்வையாளர்களிடம் கடத்திட மெனக்கெடல் இருந்திக்கலாம். ஈர்க்கக் கூடிய வகையில் வசனங்களைப் பேசுவதும் கூட காரணமாக இருக்கலாம். அதனாலயே என்னவோ, உதயநிதி இனிமே நடிக்க மாட்டேன்னு சொன்ன பிறகு, அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் ’மாமன்னன்’ நாளை வெளியாகிறது. நடிகராக உதயநிதி ஸ்டாலின் டாப் 5 திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இது. 


ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)


‘சினிமாவை நான் தேர்வு செய்யவில்லை; சினிமாதான் என்னைத் தேர்ந்தெடுத்ததுன்னு’ -சொல்லி சும்மா ஒன்லைன் கேட்டு  ராஜேஷ் இயக்கத்தில் நடிச்ச படம் -  ‘ஒரு கல், ஒரு கண்ணாடி’. பார்த்தாவோட நண்பேன்டா ஸ்டைல் காமெடி உதயநிதிக்கு நல்லா வொர்க்காயிருந்தது. முதல் திரைப்படம் என்றாலும் பெரிதாக சொதப்பாமல் ரசிகர்களிடம் தனது நடிப்பால் பாஸ் மார்க் வாங்கியிருப்பார் உதயநிதி. சொன்னோமே- உதயநிதி ஸ்கீர்ன் ப்ரசன்ஸ்க்கு ஒரு குட் ஃபீல் கொடுக்கும்னு. அதை முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்துவிட்டது. திருமண மண்டபத்தில் உதயநிதியின் 'ஆஃப் தி’ எனப் பேசும்  வசனம் அனைவரையும் ஈர்த்தது. ரசிக்க வைத்தது. வசூல் ரீதியிலான நல்ல வெற்றியும் கொடுத்தது. தனக்கு என்ன வரும் என்று புரிந்து நடித்திருப்பார். 


மனிதன் (2016)


பார்வையாளர்களுக்கு / ரசிகர்களுக்கு இப்படியான திரைப்படங்கள்தான் பிடிக்கும் என்று காமெடி ஜான்ராவில் இருந்து மாற்று களத்தில் உதயநிதியை திரையில் பார்த்த ரசிகர்களுக்கு ’சக்தி’ கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போனது. உதயநிதி சூப்பர் டூப்பரான நடிப்புன்னு சொல்லிட முடியாது. ஆனால், சக்தியின் அறியாமை, ஏமாற்றம், பின்னர் எல்லாவற்றையும் அறிந்து கொள்தல் என மிகையில்லாத நடிப்பால் அசத்தியிருப்பார். தனக்கு என்ன வரும்; இந்தக் கதை சரியாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு ‘மனிதன்’ படத்தை தேர்ந்தெடுத்திருப்பார்போல. வசூல் ரீதியிலாக வெற்றி கண்டது. ரசிகர்களுக்கும் காமெடி ஸ்கிரிப்ட் கதையை போலவே, புதிதாக முயற்சித்தாகும் பிடிக்கிறது என்பதையும் உதயநிதி புரிந்துகொண்ட படம். நீதிமன்றத்தில் சக்தி வாதிடும் காட்சி நல்லாயிருக்கும். சக்தி கதாபாத்திரத்திற்கான நடிப்பை வழங்கியிருப்பார். அடவாடியான நடிப்பு இல்லைனாலும், கதைக்கு எது தேவையோ அதை மட்டும் சரியா செஞ்சிடறேன்னு நினைச்சிருப்பாரோ என்னவோ. ‘சக்தி’-ங்கிற ஒருத்தனோட நம்பிக்கையை திரையில் மொழியில் பார்வையாளர்கள் புரிந்துகொள்ளும்படி நடித்திருப்பார், உதய். ’மனிதன்’ உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் ரசிகர்களின் விருப்பமான பட்டியலில் எப்போதும் இருக்கும். 


நிமிர் (2018)


மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக்தான் தமிழில் ‘நிமிர்’. பகத் ஃபாசில் நடித்திருப்பார். தமிழில் உதயநிதி ஸ்டாலின். ’மனிதன்’ படத்தைப் போலவே, உதயநிதியின் திரைப்பயணத்தில் ’நிமிர்’ அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுதந்த ஒன்று. அவரை எல்லா ஜானரிலும் நடிக்க வேண்டும் என்பதை நன்கு உணர தொடங்கியிருந்தார். மிரட்டலான நடிப்பு என்று சொல்லிட முடியாது என்றாலும், கதாபாத்திரத்திற்கான நடிப்பை முழுமையாக தர முயற்சித்திருப்பார். ’செல்வம்’ ஃபோட்டோகிராபர் கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருப்பார்.


சைக்கோ (2020)


மிஷ்கின் இயக்கி படமான ‘சைக்கோ’ உதயநிதியின் சினிமா பயணத்தில் முக்கியமான திரைப்படம் என்றே சொல்லலாம்.  உதயநிதி பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடித்திருப்பார். அதற்கு தேவையான உடல்மொழியை கொஞ்சம் நேர்த்தியாக செய்திருப்பார். 


மாமன்னன் (2023)


உதயநிதியின் டாப் 5 ஃபீல் குட் லிஸ்டில் ’மாமன்னன்’ நிச்சயம் இடம்பெறும் என்றே சொல்லலாம். எழுத்தாளர்,இயக்குநர் மாரி செல்வராஜின் கதையில் உதயநிதி சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று சொல்லிவிடலாம். (நாளை ’மாமன்னன்’ வெளியானதும் அதற்கான பதில் கிடைத்துவிடும். நேர்காணல் ஒன்றுல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ‘உதயநிதி கதாபாத்திற்கு ஜஸ்டீஸ் செய்திருப்பாதாக சொல்லியிருந்தார்!) கதையின் முக்கியத்துவம் அறிந்து, கடைசி திரைப்படம் மாரி செல்வராஜ் உடந்தான் என்று முடிவெடுத்தி நடித்திருக்கிறார் உதயநிதி. எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. என்னாகும் என்று பார்க்கலாம். 


குறைவான எண்ணிக்கையிலேயே உதயநிதியின் திரைப்படங்கள். அரசியல் பணி அழைத்ததால் சினிமாவிற்கு டாட்டா சொல்லிவிட்டார். மக்கள் பணி; நிறைய மெனக்கெடல் அவசியமாகிறது என்பதை பல நேர்காணல்களில் உதயநிதி குறிப்பிட்டிருக்கிறார். முதல் திரைப்படத்தில் (ஒரு கல் ஒரு கண்ணாடி) உடல்தோற்றத்தை கேலி செய்யும் வகையில் பெண்களை டீஸ் செய்யும் வசனங்கள் இடம்பெற்றதில் தொடங்கி, ரசிகர்கள் எல்லாவிதமான கதைகளையும் விரும்புவார்கள், என்று  புரிதல் ஏற்பட்டு நடிக்க கதைகளைத் தேர்வு செய்தார். அதற்கு பாராட்டுகள். அடாவடியான, மாஸ் காட்ட வேண்டும் என்றில்லாமல், தன்னுடைய ஸ்டைல் இதுதான்; கதைக்கேற்றவாறு மெனக்கெடல்களோடு சிறப்பாக நடிப்பை வழங்க முயற்சித்திருப்பார். இயல்பான, நெருடலின்றி நடித்திருப்பார். நிச்சியம், உங்க ஸ்கிரீன் ப்ரசன்ஸ் மிஸ் செய்வோம், உதய்.


தயாரிப்பாளராக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்த வசனத்தை நீக்காததற்கு,’ அப்போ என்னோட அரசியல் புரிதல் அவ்ளோதான். சமூக நீதி பற்றி அரசியலுக்கு வர வர நான் தெரிஞ்சிகிட்டேன்.” ”நமக்கு நடிக்கவே வராது. நான் இல்லை. என்னோட கதாபாத்திரம் (இயக்குநர்) அரசியல் பேசியிருப்பார்”-ன்னு சொன்னாதாகட்டும் எல்லா இடங்களிலும் மனதில் தோன்றியதை பேசுவது அனைவருக்கும் பிடித்துப்போனது. அரசியலில் தெளிவான சிந்தனையோடு செயல்பட வாழ்த்துகள். ரசிகர்கள் சார்பாக ஆல் தி பெஸ்ட், நடிகர் உதய்