2023ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வாரிசு, துணிவு இரண்டு படங்களும் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.


பொங்கல் ரேஸ்


இந்த ஆண்டு தல பொங்கலா, தளபதி பொங்கலா என்ற ஏட்டி போட்டிகளுக்கு இடம் தாராமல் இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில், பெரும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் விஜய் - அஜித் இருவரது படங்களும் வெளியாகின.


2014ஆம் ஆண்டு வீரம் - ஜில்லா படங்கள் நேருக்கு நேர் பொங்கல் ரிலீசாக மோதியதை அடுத்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரே நாளில் ரிலீசாகின.


ஜில்லா - வீரம் ரேஸில் அந்த சமயத்தில் வணிகரீதியிலும் சரி விமர்சனரீதியாகவும் சரி, வீரம் படமே வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேருக்கு நேர்  விஜய் - அஜித் படங்கள் மோதும் இந்த ரேஸை ஜெயிக்கப்போவது யார் என்ற போட்டா போட்டி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் விவாதத்துக்குள்ளானது.


களைகட்டிய ட்விட்டர்!


படம் ரிலீசாவதற்கு முன்பே தொடங்கிய ஃபேன் வார், முட்டல் மோதல் என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் களைகட்டத் தொடங்கின.


இந்நிலையில், துணிவு பக்கா கமர்ஷியல் ஆக்‌ஷன் ஹெய்ஸ்ட் (Action Heist) எனவும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக வாரிசும் நல்ல ஓப்பனிங்கைப் பெற்றன. முதல் வாரம் முழுவதும் இரு படங்களும் அவற்றின் வசூலை மாறி மாறி ஈடுகட்டி உலகம் முழுவதும் ஒன்றாகவே 150 கோடி வசூலை எட்டின.


சர்ச்சையைக் கிளப்பிய வாரிசு வசூல்!


தொடர்ந்து வாரிசு படம் ரேஸில் சற்று முந்தி ஒரு வார காலத்தில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.


ஆனால் அதெப்படி ஒரு வார காலத்தில் 210 கோடி வசூல் சாத்தியம் என ரசிகர்கள் உள்பட பலரும் சந்தேகம் தெரிவித்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், மாவட்ட வாரியாக இவர்கள் தகவல் சொல்வதில்லை, கதாநாயகர்களை திருப்திப்படுத்தவே இப்படி செய்கிறார்கள்” என மறைமுகமாக இத்தகவல் உண்மையல்ல எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க: இன்று 210 கோடி சொல்வார்கள்.. நாளை 300 கோடி சொல்வார்கள்.. அவர்களுக்கு தான் தெரியும்... வாரிசு வசூல் பற்றி திருப்பூர் சுப்பிரமணியம் பளிச்!


துணிவு வசூல் எவ்வளவு?


ஆனால் துணிவு படத்தின் அதிகாரப்பூர்வத் தகவல் பற்றி எந்தத் தகவலும் வெளியிடப்படாத நிலையில், துணிவு தான் ரியல் வின்னர் என படம் வெளியான முதல் வாரத்திலேயே  ட்வீட் செய்திருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.


மற்றொருபுறம், வழக்கமாக விஜய் படங்கள் முதல் நாளே அதிகம் வசூலித்து வந்துள்ள நிலையில், குடும்பக்கதை எனும் காரணத்தால் வாரிசுபடம் வெளியீட்டுக்கு அடுத்தடுத்து வந்த பொங்கல் விடுமுறை நாள்கள்,  வார இறுதி நாள்களில் வசூல் அதிகரித்தது.


மேலும் பட திரையரங்குகள் வாரிசு படத்துக்கான ஷோக்கள் மட்டும் அதிகரிக்கப்பட்ட நிலையில், அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் வெளிப்படையாகவே  தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.


கதையில் யார் ஸ்ட்ராங்?


ஆனால் குடும்ப ஆடியன்ஸைக் கவர்ந்தாலும் கதையைப் பொறுத்தவரை வாரிசு கடும் விமர்சனங்களையும் சந்தித்தது. சீரியலை படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள், பெண்களை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது என்பன போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், மற்றொரு புறம் துணிவு படத்தின் கதை பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை அள்ளியது.


வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து சமூகக் கருத்து தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்த துணிவு கதை நல்ல விமர்சனகளைப் பெற்று விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளியது.


வென்றது யார்?


இந்நிலையில் இதற்கு பின் அடக்கி வாசித்த வந்த வாரிசு படக்குழுவினர் பிப்.07ஆம் தேதி வாரிசு படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.


மற்றொருபுறம் துணிவு படம் இதுவரை 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், முன்னதாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி துணிவு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மற்றொருபுறம் வரும் 22ஆம் தேதி வாரிசு படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் தற்போது வரை வெளிவந்திருக்கும் அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி வசூல்ரீதியாக வாரிசு படமே இந்த ரேஸில் முந்தி கில்லியாக அடித்து வென்றுள்ளது எனக் கூறலாம்!