தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி மீண்டும்  வெற்றி பெற்றுள்ளார்.


தயாரிப்பாளர் சங்க தேர்தல்


தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் என்றால் அது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தான். தயாரிப்பாளர்களுக்கு என்று இரண்டு மூன்று சங்கங்கள் இருந்தாலும் இந்த சங்கம்தான் முன்னிலை வகிக்கிறது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தற்போதைய தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி இருந்தார். 


இதனிடையே தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில்  தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.


நலம் காக்கும் அணி  - உரிமை காக்கும் அணி


இதில், தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியில் தலைவராக தேனாண்டாள் முரளி, துணைத் தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி போட்டியிட்டனர். இதேபோல் செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் போட்டியிட்டனர். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச் செயலாளர் பதவிக்கு சௌந்தரபாண்டியன் போட்டியிட்டனர். 


மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணியில் தலைவராக மன்னனும் துணைத் தலைவர்களாக மைக்கேல் ராயப்பன் மற்றும் விடியல் ராஜூ போட்டிட்டனர். செயலாளர்களாக கமீலா நாசர், தேனப்பன், பொருளாளர் பதவிக்கு ரவீந்தர், இணை செயலாளர் பதவிக்கு மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் வாக்களித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சசிகுமார், பிரகாஷ் ராஜ், தேவயானி, ஏ.ஆர்.முருகதாஸ், பாரதி ராஜா,மன்சூர் அலிகான்  உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 


இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனை விட 150 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக முரளி சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பொருளாளராக முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார்.